கர்நாடக பாஜக தலைவர்களுடன் மேகதாது குறித்து அண்ணாமலை பேசத் தயாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை: தமிழகத்தில் எல்லா எதிர்க்கட்சிகளும் செயல்படுவதாகவும், ஆனால் மக்கள் பிரச்னைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்ற பாமக வித்தியாசமான எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் சூதாட்டம் குறித்து சிறப்பு சட்டத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மோடி டக்கென கேட்ட கேள்வி.. எதிர்பாராமல் திகைத்த அன்புமணி.. அப்போ கன்பார்மா? 20 நிமிஷம் நடந்தது என்ன?
பிரதமருடனான சந்திப்பு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன் என்று தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு பாராட்டு
தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் குறித்து சிறப்பு சட்டம் கொண்டு வர குழு அமைத்த தமிழக அரசின் வரவேற்கிறேன். அதேபோல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் இயற்றப்பட்ட போது, இதுபோல் தற்கொலைகள் ஏற்படவில்லை. இப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதி இருப்பதால் மட்டுமே அதிகளவில் தற்கொலைகள் ஏற்படுகிறது. அதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை பற்றி அன்புமணி
தமிழகத்தில் மேகதாது பிரச்னைக்காக ஆரம்பம் முதல் போராடி வரும் கட்சி பாமக தான். இப்போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என்ற போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
யார் எதிர்க்கட்சி?
தமிழகத்தில் எல்லா எதிர்க்கட்சிகளும் செயல்படுகின்றன. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் மக்களின் பிரச்னைகளை அரசிடம் கொண்டு சென்று முடிவை ஏற்படுத்துவது பாமக-தான். நாங்கள் வித்தியாசமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். உணர்வுப்பூர்வமான அரசியலை முன்னெடுக்கிறோம் என்று தெரிவித்தார்.