“அன்புமணி தரப்பின் திருட்டுத்தனத்தால் தேர்தல் ஆணைய கடிதம் அங்கு போயிருக்கு” - பாமக எம்.எல்.ஏ அருள்
சென்னை: "பாமகவின் கொடியும், சின்னமும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் சொந்தம். இந்தக் கடிதம் பாமக என்ற பெயரில் வந்தது. அவர்களின் திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது. அவர்கள் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு முகவரியை மாற்றியதால் இந்தக் கடிதம் அவர்களுக்கு சென்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ அருள்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் தான் பாமக உட்கட்சி மோதலால் பாமகவில் குழப்பம் நிலவி வருகிறது. ராமதாஸ் - அன்புமணி சண்டை உச்சகட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அதிகார மோதல் நடந்து வருகிறது.

பாமக அதிகார மோதல்
இந்த நிலையில், பாமகவும், மாம்பழ சின்னமும் தங்களுக்குத்தான் என்று அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு இன்று பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தை பாமக தலைமைத் தேர்தல் அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றார்.
வழக்கறிஞர் பாலு பேட்டி
அன்புமணியை ஏற்பவர் மட்டுமே மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியும். அன்புமணியை தலைவராக ஏற்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் பாமகவை அன்புமணி வழிநடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அன்புமணியின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் அன்புமணிக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், ராமதாஸ் என்ன செய்யப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராமதாஸ் ஆதரவாளர் அருள் பேட்டி
இந்நிலையில், ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், "பாமகவை பொறுத்தவரை அதன் நிறுவனர், தலைவர் ராமதாஸ் தான். 46 ஆண்டுகள் அவர் உழைத்து வளர்த்த கட்சி பாமக. இந்தக் கட்சியை பெற்றெடுத்த மகனாக இருந்தால் கூட அவரிடம் இருந்து திருட முடியாது. வன்னியர் சமூக மக்கள் அவர் பின்னால் தான் உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த தேர்தலில், ராமதாஸ் அவர்களுக்கே தெரியாமல் முகவரியை திருட்டுத்தனமாக மாற்றி கொடுத்து உள்ளனர். இந்தக் கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான கட்சி என்று எங்கும் குறிப்பிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி என்றுதான் உள்ளது. இந்த கடிதம் அவர்களுக்கு வந்தது தவறானது. நாங்கள் அதற்கு முன்பாகவே அனுப்பிய கடிதத்திற்கு இன்னும் ஒப்புதல் கடிதம் வரவில்லை.
திருட்டுத்தனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் உடைய கட்சி. அன்புமணி புதிதாக கட்சி வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். பாமக என்பது லட்சோப லட்சம் வன்னிய மக்களின் ரத்தம் சிந்தி உருவான கட்சி, அதை ராமதாஸிடம் இருந்து திருட முடியாது. அன்புமணி கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். பாமகவின் கொடியும், சின்னமும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் சொந்தம். இந்தக் கடிதம் பாமகவுக்கு வந்தது. அவர்களின் திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications