அன்புமணி நடத்திய போராட்டம்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்! பாமகவுக்கு கிடைத்த பாதி வெற்றி!
சென்னை: போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அண்மையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்திய நிலையில் தீவிர ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் தீவிர நடவடிக்கைகளை, தங்களுக்கு கிடைத்த பாதி வெற்றியாக கருதுகிறார்கள் பாமகவினர்.
இதனிடையே இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், பாமகவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து போதைப் பொருட்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது தெரியுமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் பகீர் தகவல்!
போதைப் பொருட்கள்
தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கியிருக்கிறார். இதற்காகவே காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை இன்று நடத்தி சில கறார் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். போதைப் பொருள் தயாரிப்பவர்கள் அதை கடத்தி வருபவர்கள் என அதில் தொடர்புடைய அனைவரையும் சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
பாமக எம்.எல்.ஏ.
இதுமட்டுமல்லாமல் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள அவர், பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்லியுள்ளார். இவை எல்லாமே நடப்பதற்கு பாமக நடத்திய போராட்டம் தான் காரணம் எனக் கூறுகிறார்கள் அக்கட்சியினர். இது தொடர்பாக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஒன் இந்தியா தமிழிடம் பேசுகையில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் முதல்வர் வேகம் காட்டுவதை வரவேற்பதாக கூறினார்.
போதைப் பொருட்கள்
போதைப் பொருட்கள் ஒழிப்பு விவகாரத்தில் பாமகவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததற்காக நன்றி கூறிக் கொள்வதாகவும் ஆனால் அதேவேளையில், வெறும் ஆய்வுக்கூட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதோடு முடிந்துவிடாமல் தமிழகத்தில் முற்றிலும் போதைப் பொருட்களை முதல்வர் ஒழித்துக்காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்காது என அருள் எம்.எல்.ஏ. கூறினார்.