பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் களம், கோடை காலத்தை விட தகித்து வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு சென்று விட்டார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.ஆனால், 'நான் தான் கட்சி.. நான் சொல்பவர்கள் தான் நிர்வாகிகள்" என சொன்ன ராமதாஸ் அரசியலில் முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கட்சி, சின்னம் என அனைத்தும் அன்புமணி தரப்புக்கு சென்று விட்ட நிலையில் வேட்பாளர்களை தேடி அலைய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
2026 தேர்தலுக்கு ஒரு ஆண்டு முன்பே, அதாவது 2025 தொடக்கத்திலேயே தமிழகத்தில் தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைவருமே 2026 தேர்தலை நோக்கி தங்கள் பணிகளை முன்னெடுத்து வந்தனர்.
அப்படி நடந்தது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாநாடு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவன்று மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க பிரம்மாண்ட மாநாடு நடைபெறும். கடந்த சில ஆண்டுகள் ஒரு சில காரணங்களால் அந்த மாநாடு நடைபெறாத நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதனை நடத்திக் காட்ட வேண்டும் என களத்தில் இறங்கினார் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ் அதற்கு ஒப்புதல் கொடுக்க வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போதுதான் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியை பதவியில் இருந்து நீக்குவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ராமதாஸ் மேலும் அன்புமணி ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் நான் தான் கட்சியின் தலைவர் எனக் கூறிய அன்புமணி, தனது ஆதரவாளர்களுக்கு பதவியை கொடுத்துவிட்டு ராமதாஸின் ஆதரவாளர்களை தூக்கி அடித்தார்.
பாமக பிரச்சனை
அதற்கு பிறகு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என மாறி மாறி வழக்கு தொடர்ந்து சென்று ராமதாஸுக்கு நன்மை நடக்கவில்லை. இந்த நிலையில் 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி தரும் விதமாக அன்புமணியை அணுகினார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக தலைவர்களும் அன்புமணியை ஏற்றுக் கொண்டனர். ஒரு வழியாக தேர்தல் ஆணையம் நீதிமன்றம் தீர்ப்பு காரணமாக கட்சியின், பெயர், சின்னம், கொடி ஆகியவை அன்புமணி தரப்புக்கு வந்தது.
ஜிகே மணி
விலகிச் சென்ற நிர்வாகிகள் பலர் அன்புமணி பின்னால் அணி திரண்டனர். ஆனால் ஜிகே மணி, அருள் உள்ளிட்ட சிலரை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என ஒரே அடியாக சொல்லிவிட்டார் அன்புமணி. இதற்கிடையே திமுக, தமிழக வெற்றி கழகம் என பல தரப்பிடம் கூட்டணி பேசிய ராமதாஸ் எந்த ஒரு தரப்பும் கிரீன் சிக்னல் தராததால் கடைசியில் சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். அருள் உள்ளிட்டோரை 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
ராமதாஸ்
தற்போதைக்கு 10 வேட்பாளர்கள் கூட முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் வட மாவட்டங்களில் 70 வேட்பாளர்களை அறிவிக்க ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் தைலாபுரம் வட்டாரத்தினர். இது ஒருபுறம் இருக்க பென்னாகரம் எம்எல்ஏவும் ராமதாஸின் தீவிர ஆதரவாளர் ஜிகே மணியின் மகனுமான ஜிகேஎம் தமிழ் குமரன் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். தனது தந்தையின் பென்னாகரம் தொகுதியில் இருந்து போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கட்சியில் சேர்ந்த உடனே சீட்டு தர முடியாது என காங்கிரஸ் தலைமை சிகப்பு கொடி காட்டிவிட்டதாம்.
2026 சட்டமன்ற தேர்தல்
இது ஒருபுறம் இருக்க பிரச்சனைக்கு மூல காரணமாக அமைந்தது ஜிகேஎம் தமிழ் குமரன் தான். அவரை இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் நியமித்து நிலையில் சில மாதங்களில் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு தனது பேரனை அந்த பதவியில் அமர்த்தினார். அப்போது கட்சியும் உடைந்து போய்விட்டது. இப்படி ராமதாஸ், இளைஞர் சங்க தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அவசரப்பட்டு எடுத்த முடிவுதான் தற்போது அவரை அரசியல் அனாதையாக்கிவிட்டது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் மூலம் திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என திட்டமிட்டிருந்த ஜிகே மணி, அருள் ஆகியோர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் புலம்பித் தவித்து வருகிறார்கள் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications