மனிதகுலத்தை வேட்டையாடும் ஆன்லைன் சூதாட்டம்! ஆளுநர் மனம் இரங்காதா? அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!
ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடச் சொல்லும் அன்புமணி.
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் மனிதகுலத்தை வேட்டையாடுவதாகவும் ஆளுநரின் மனம் இரங்காதா எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஆன்லைன் சூதாட்டம்
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதகுலத்தை வேட்டையாடுகிறது
ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும்.

ஒப்புதல் மறுப்பது
ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுப்பது ஏற்க முடியாதது ஆகும்.

அனுமதிக்க முடியாது
ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications