ஒரே தேதிகளில் 2 தேர்வுகள் வேண்டாமே! அமைச்சர் பொன்முடிக்கு அன்புமணியின் அன்பு வேண்டுகோள்!
சென்னை: ஒரே தேதிகளில் 2 தேர்வுகள் வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவில் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

வானிலை ஆய்வுத்துறை
இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் திசம்பர் 10 - 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

அடிப்படைத் தகுதி
அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை. தேர்வுகளும் நடப்பதால் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்திலிருந்து அதிகம் பேர்
2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்.

உயர்கல்வித்துறை
அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் திசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும்.












Click it and Unblock the Notifications