தை மாதத்திற்கான சிறப்புகள் சித்திரை மாதத்திற்கும் உண்டு! 2 மாதங்களையும் விட்டுத்தராத அன்புமணி!
சென்னை: தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு தை முதல் நாளா, சித்திரை முதல் நாளா என்ற விவாதத்திற்குள் செல்லாமல் இரண்டு மாதங்களையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.
அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.
தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.
சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை. அதற்கேற்ற வகையில் தமிழர்களின் வாழ்க்கையில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்கட்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்.












Click it and Unblock the Notifications