இந்த வழியில் கூட இந்தியை திணிப்பதா?.. மத்திய அரசை விளாசி தள்ளும் டாக்டர் ராமதாஸ்!
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நமது நாட்டில் அரசு துறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பலாம். ஆனால் அவ்வாறு கேள்வி எழுப்பும் ஆர்வலர்களுக்கு இந்தியில் பதில்கள் அனுப்பப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
|
இந்தியில் பதில்கள்
அதாவது ஒருவர் ஆங்கிலத்தில் அல்லது பிராந்திய மொழியில் கேள்வி கேட்டாலும், அதற்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல் இந்தியிலேயே பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தி தெரியாதவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர் சமீபத்தில் தமிழகத்தில் இருந்தும் ஒரு ஆர்வலர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியில் பதில் அனுப்பப்பட்டது.

முகவரியில் கூட இந்தி
அது மட்டுமல்ல, அவரது வீட்டு விலாசத்துக்கு அனுப்பப்பட்ட அந்த பதில் கடிதத்தில் அவரது வீட்டு விலாசத்தையும் இந்தியில் எழுதி அனுப்பி இருந்தனர் அதிகாரிகள். அதிகாரிகளின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நோக்கம் சிதைக்கப்படுகிறது
மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்தி தெரியாத, இந்தி படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை விண்ணப்பதாரர்களால் படித்து அறிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.

இதுவும் இந்தி திணிப்புதான்
இவை அனைத்தையும் விட உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications