டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்.. பாமக ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பாக பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்.
இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர்
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் எடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும். ஆனால் வைப்பதில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

தனி இலவச பேருந்து சேவை
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்து சேவை வேண்டும்.

60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்
தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

ஐஐடிக்கு நிகராக 5 இடங்களில் கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க அனைவருக்கும் இலவச பேருந்து சேவைக்கு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

மே 1 முழு மதுவிலக்கு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம். ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அது போல் சிகரெட்டும் ஒழிய வேண்டும். கடைசி விவசாயி திரைப்படம் பார்த்தேன். அதன் பிறகு இன்னொரு படத்தை பார்த்தேன். அதில் ஹீரோ ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதை பார்த்தேன். அதிலிருந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன் என ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications