இறங்கி வந்த பாஜக.. டீல் ‘ஓகே’! களைகட்டும் ‘தைலாபுரம்’.. நாளை அதிமுக்கிய மீட்டிங்!
சென்னை: பாமக - பாஜக இடையே சீட் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. நாளை தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாகவும், அதன் பிறகு கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர் தேர்வு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுகள்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துவிட்டது. 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து வருகிறது. அதேசமயம், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிகளில் இன்னும் எத்தனை கட்சிகள் என்பதே உறுதியாகாத இழுபறி நிலை உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 முதல் தொடர்ந்து வந்த கூட்டணியில் நீடித்த பாஜக- அதிமுக இடையேயான உறவு முறிந்துள்ள நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஜக, அதிமுக இரு அணிகளிலுமே இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
பாமக, தேமுதிக: அதிமுக, பாஜக தனித்தனி கூட்டணியை உருவாக்கி வரும் நிலையில், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளன. எந்த கூட்டணியில் அதிக தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கிடைக்கிறதோ அந்த கூட்டணிக்கு செல்லலாம் என இரு கட்சிகளுமே கணக்கு போட்டுள்ளன. தற்போது வரை அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதாகச் சொன்னாலும் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை என்பதே உண்மை.
அதேபோல, பாமக ஆரம்பத்தில் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தைலாபுரத்திற்கு சென்று ராமதாஸ் உடன் பலமுறை பேசியுள்ளார். அப்போது 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கேட்டுள்ளது பாமக. இதற்கு அதிமுக தரப்பில் 7 மக்களவை தொகுதிக்கு ஓகே சொல்லிவிட்டது. ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.
அன்புமணி விடாப்பிடி: ஆனால், பாமகவோ, ராஜ்யசபா சீட் என்பதில் உறுதியாக இருக்கிறதாம். இதன் காரணமாகவே, பாஜக பக்கம் செல்வதற்கு அச்சாரம் போட்டுள்ளார் அன்புமணி. மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் அன்புமணி ராமதாஸை தனியாகச் சந்தித்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக தரப்பு, வட மாவட்டங்கள் உள்ளிட்ட 8 இடங்களை தருவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது பற்றி பாஜகவின் மையக்குழு முடிவு செய்யும் எனவும், நல்ல செய்தியை விரைவில் தருகிறோம் என்றும் மேலும் மத்திய அமைச்சர் பதவி பற்றி தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக உடன் கூட்டணி உறுதி: இதையடுத்து, சாதக பாதக அம்சங்களை கணக்குப் போட்டுப் பார்த்து, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி ராமதாஸ் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தைலாபுரத்தில் அவசரமாக பாமக கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அந்தக் கூட்டத்தின்போது, எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாமக , அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், அதில் சற்று விலகல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடியே, பாமகவுடன் இப்போது பேசவில்லை, தேமுதிக உடன் தான் பேசி வருகிறோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாமக பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications