"அந்த" ஒரே ஒரு பதவி.. ஜரூர் பேர பாமக...கண்டிஷன்கள் பெயரில் கதிகலங்க வைக்குதே பாஜக- தோட்டம் அப்செட்!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பக்கம் போவது என ஒருவழியாக முடிவெடுத்து பாமக பேரங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியதாம். ஆனால் பாஜக தரப்போ, தைலாபுரம் தோட்டத்தை தலை சுற்ற வைக்கும் நிபந்தனைகள் விதிப்பதால் 'எங்கே செல்லும் இந்த பாதை' என புலம்பித் தவிக்கிறதாம் பாமக.
"தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். இவர்கள் கேட்கப் போகிறார்கள். ஆனால், எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை" என்பது சில நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் எழுதிய பதிவின் அர்த்தம் அரசியல் வட்டாரங்களில் அறிந்ததுதான்.

திமுக கூட்டணி சேப்டர் குளோஸ்: திமுக கூட்டணிக்கு பாமக முயற்சித்துப் பார்த்தது; திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக, தவாக இருப்பதால் எடுத்த எடுப்பில் பாமக விருப்பத்தை திமுக தலைமை நிராகரித்திருந்தது. இருந்த போதும் ஒருவேளை அந்த இரு கட்சிகளும் வெளியேறினால் எத்தனை சீட் எதிர்பார்ப்பீர்கள்? என்ற கேள்விக்கு பாமக தந்த பதிலால், ஆஹா, ஆணியே வேண்டாம் என கதவை சாத்தியதாம் திமுக. இதனைத்தான் டாக்டர் ராமதாஸ் பூடகமாக பதிவிட்டிருந்தார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாமகவின் சிங்கிள் அஜெண்டா: இதனைத் தொடர்ந்து வேறு வழியே இல்லாமல் இப்போது இருக்கிற பாஜக பக்கமே தொடர்ந்து பேசுவோம் என முடிவெடுத்ததாம் தைலாபுரம் தோட்டம். பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் ஒற்றை அஜெண்டாதான்.. 'மத்திய அமைச்சர் பதவி'... லோக்சபா தேர்தலில் ஜெயித்தும் இந்த கனவு நிறைவேறலை.. ராஜ்யசபா சீட் வாங்கி நாடாளுமன்றத்தில் நுழைந்தும் காத்திருப்புதான் மிச்சம்.. அதனால் 2024-ல் எப்படியும் மத்திய அமைச்சர் பதவி உறுதியாக வாங்கித்தான் தீருவது என்கிற முடிவோடு பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதாம் பாமக.
பாஜகவின் பகீர் நிபந்தனைகள்: பாமகவின் ஒற்றை இலக்கு இதுதான் என்பதை நன்றாகவே புரிந்து கொண்ட பாஜக தரப்போ, கண்ணை கட்டி காட்டில் விடுகிற கதையாக ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டதாம். இது தொடர்பாக பாமக வட்டாரங்களில் பேசிய போது, கண்டிஷன்கள் போட்டாலும் பரவாயில்லைங்க.. கரண்ட் கம்பங்களை கண்டிஷன் என்ற பெயரில் வரிசையாக களமிறக்கி தலையில் இடியைப் போடுகிறது பாஜக என புலம்புகின்றனர். லோக்சபா தேர்தல் என்பதாலும் மத்திய அமைச்சர் பதவி என்பதாலும்தான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறதாம் தோட்டம்.. இல்லை எனில் திமுக அல்லது அதிமுக என முடிவெடுத்துவிடுமாம்.. எல்லாம் பதவிக்காகத்தானே அரசியல் சார் என்கின்றன. எங்கே செல்லும் இந்த பாதைதான்!












Click it and Unblock the Notifications