காதலிக்கலாம்.. ஆனால் 16 வயசில் வருவதற்கு பெயர் என்ன தெரியுமா.. சவுமியா அன்புமணி
காதல் குறித்து சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "16 வயசில் வருவதெல்லாம் காதல் கிடையாது.. உடலாலும் மனதாலும் தகுதியான பின்னர் வரும் காதல், 5 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்" என்று சவுமியா அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காதல் விவகாரத்தில் யார் செத்தாலும் சரி, மோதல் ஏற்பட்டாலும் சரி, கலவரம் வெடித்தாலும் சரி, முதலில் வந்து ஒரு கண்டனத்தை தெரிவித்து விட்டு போவது டாக்டர் ராமதாஸ்தான்.
காதலுக்கு எதிரி இல்லை என்று பலமுறை இவர் விளக்கம் அளித்திருந்தாலும், தொடர்ந்த இந்த கேள்வியில் நமக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
தண்ணீர் பிரச்சனை
இந்நிலையில், அன்புமணியின் மனைவி சவுமியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக அரசியல் சூழல், தண்ணீர் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் காதல் குறித்தும் கருத்து கேட்டனர்.
பெண் பாதுகாப்பு
"பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் பொது இடங்களில் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இப்ப தண்ணீர் பிரச்சனை வருவதால்தான் இதைப்பற்றியே பேசுகிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், மழைநீரை சேமிக்கவும் வறட்சியைப் போக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசின் நிதி பற்றாக்குறைதான்" என்றார்.
வருத்தம்
நடந்து முடிந்த தேர்தலை பற்றின கேள்விக்கு, "தகுதியான வேட்பாளர்களையே பொதுமக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது" என்று சவுமியா பதிலளித்தார்.
16 வயசு காதல்
காதல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "காதலுக்கு பாமக எதிரியா?" இதுதான் அந்த கேள்வி. இதற்கு சவுமியா, "16 வயதில் வருவது காதல் கிடையாது. உடலாலும் மனதாலும் தகுதியான பின்னர் வரும் காதல், குறைந்தது 5 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுவே உண்மையான காதல்" என்று விளக்கம் அளித்தார்.