சுசீலா லீக்ஸ்.. ராமதாஸால் அதிருப்தியில் ’பெல்’ தலைவர்! தூது போனவரை திருப்பி அனுப்பிய அன்புமணி?
சென்னை: பரபரப்பாக இருந்த பாமக உட்கட்சி விவகாரங்கள் சற்றே ஓய்ந்திருக்கிறது. ராமதாஸின் இரண்டாவது மனைவி சுசீலா குறித்த தகவலால் ராமதாஸ் பக்கம் இருந்த நிர்வாகிகள் ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜிகே மணி உள்ளிட்ட சிலர் அன்புமணி தரப்புடன் சமாதானம் பேச முயன்றதாகவும், ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தில் இருந்தது. கட்சியின் தலைவரான அன்புமணியை நீக்கிவிட்டு அவரைச் செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்ததில் இருந்தே இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளும் ராமதாஸால் தூக்கி அடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கட்சியின் தலைவர் நான் தான் என அன்புமணி உறுதியாக நின்றார். ராமதாஸ் கடுமையாகப் பேசியும் அன்புமணி எதுவுமே பேசவில்லை.

பாமக அரசியல்
மேலும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தானே தலைவராகத் தொடர்வதாகவும் அடுத்த ஆண்டு வரை கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நான் தான் முடிவெடுப்பேன் என பொதுக்குழு மூலம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் அன்புமணி. மேலும் இந்தத் தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ராமதாஸ் போட்டிப் பொதுக்குழு நடத்தினார். அதில் அன்புமணி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரணை நடத்தியது ராமதாஸ் தரப்பு. மேலும், அன்புமணிக்கு இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறது.
சுசீலா விவகாரம்
இது ஒரு புறம் இருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமதாஸ் தனது இரண்டாவது மனைவியான சுசீலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடியதாகப் புகைப்படங்கள் வெளியானது. இது பாமகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 50 ஆண்டுகளாக இரண்டாவது மனைவி இருக்கும் விஷயத்தையே ராமதாஸ் மறைத்து விட்டதாகவும், பொதுவெளிகளில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் இரண்டாவது திருமணம் செய்தது நியாயமா என பாட்டாளி மக்கள் கட்சியினரே சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
பாமக உட்கட்சி மோதல்
சுசீலாவின் பின்னணி குறித்தும் அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியான நிலையில், ராமதாஸுக்கான ஆதரவு வட்டம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில், ஜிகே மணி உள்ளிட்ட ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் பொதுவெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வந்தனர். பலரும் ராமதாஸின் இரண்டாவது திருமணம் குறித்துப் பேசுவார்கள் என்பதால் செய்தியாளர் சந்திப்பையும் தவிர்த்தனர். இந்த நிலையில், ராமதாஸ் தரப்பில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் அன்புமணி தரப்பிடம் சமாதானம் பேசி அவர் தரப்புக்குத் தாவ முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஜிகே மணி
குறிப்பாக, கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணி அன்புமணி தரப்பைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் அன்புமணி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அன்புமணி தரப்பு. மேலும், கட்சியின் தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு ராமதாஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை நீக்கவும், அவரால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள், செயலாளர்களைக் கட்சியில் இருந்து நீக்க அன்புமணி திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சி சிக்கல்
இதற்கிடையே ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் சில நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், அதற்கும் அன்புமணி தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முடிவு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் எனக் கூறி இருக்கும் அன்புமணி, தனது 100 நாள் நடை பயணத்தைத் தொடர முடிவு செய்து இருக்கிறார். அடுத்தகட்ட நடைபயணம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications