அதானி லஞ்ச விவகாரம்.. செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்.. பாமக சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?. செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு பா.ம.க. அஞ்சாது என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி 15 நாட்களுக்கு முன் வினா எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

senthil balaji pmk

ஆனால், அந்த அறிக்கையில் பா.ம.க.வின் வினாவுக்கு பதில் இல்லை; மாறாக வழக்கமாகப் பாடும் பல்லவியைத் தான் செந்தில் பாலாஜி மீண்டும் பாடியிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவணிகத்துறையையும் கூடுதலாக கவனித்து வருவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா அவருக்கு புரியாமல் இருந்திருக்கலாம். அதனால், மீண்டும் ஒரு முறை வினாவை முன் வைக்கிறேன். அதை நன்றாக படித்துப் பார்த்து விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும்.

''அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. எனவே இது பற்றி தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்’’ என்பது தான் எங்களின் வினா ஆகும்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் கூட இந்த வினாவைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், பேரறிவு படைத்த பெருந்தகையான செந்தில் பாலாஜியால் இந்த வினாவை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அதானி குழுமத்துடன் நாங்கள் நேரடியாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதையே மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார். அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக பா.ம.க. எங்கும் கூறவில்லை.

மாறாக, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தால் ரூ.2.61 என்ற அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட அதானி குழுமத்தின் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதற்காக சூரிய மின்னுற்பத்திக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக, அந்த ஒப்பந்தத்தால் பயனடையப் போகும் அதானி குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியத்திற்கு ஊக்குவிப்பு வழங்கியுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதற்கு செந்தில் பாலாஜியும் இதுவரை விளக்கமளிக்கவில்லை; அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதுவரையில் பதில் அளிக்கவில்லை.

அதானி குழும மின்சாரத்தை சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கு அதானி குழுமத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் கையூட்டு பெற்றது என்ற குற்றச்சாட்டு இப்போதும் அமெரிக்க நீதிமன்றத்தில் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி பழைய பல்லவிகளை பாடுவதை விடுத்து அந்தக் குற்றச்சாட்டுக்கு இப்போதாவது பதில் கூற வேண்டும். அதை அவர் செய்வாரா?

அடுத்ததாக, 2022&ஆம் ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால், மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்ததாக பா.ம.க. கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு என்றும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். ஆனால், மின்கட்டண உயர்வால் எவ்வளவு கூடுதல் வருமானம் கிடைத்தது என்பது குறித்து அந்த அறிக்கையில் எங்குமே அவர் வாய் திறக்கவில்லை.

மின் கட்டணத்தை உயர்த்திய பிறகும், தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா. ஆனாலும், அதற்கும் தியாகி செந்தில் பாலாஜி பதிலளிக்கவில்லை. மாறாக, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மின்வாரியத்தின் இழப்பைக் குறைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கேட்கிறேன்... தமிழ்நாட்டில் இது வரை மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்சார வாரியத்திற்கு கிடைத்த கூடுதல் வருவாய் எவ்வளவு?. கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டு இழப்பு எவ்வளவு?. மின்வாரியத்தின் நஷ்டத்தை விட அதிக தொகைக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய பிறகும் மின்வாரியம் லாபம் ஈட்டாததன் மர்மம் என்ன? என்பது குறித்தெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாரா?

வடசென்னை அனல் மின் நிலையம் நிலை &3 கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட போதிலும் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தியை தொடங்கவில்லை என்பது தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக கடந்த ஜூன் 27&ஆம் நாள் 800 மெகாவாட் உற்பத்தித் திறனை எட்டி விட்டதாக செந்தில் பாலாஜி மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அத்துறை தொடர்பான வினாவே புரியவில்லை என்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாவது பேச வேண்டும். வணிகரீதியிலான மின்னுற்பத்தி என்ற நிலையை அடைய வேண்டும் என்றால், ஒரு மின்னுற்பத்தி நிலையம் தொடந்து 72 மணி நேரத்திற்கு அதன் முழுத் திறனுடன் இயங்கவேண்டும்.

ஆனால், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை & 3 இதுவரை அந்த நிலையை எட்டவில்லை. அதுமட்டுமின்றி, இன்றைக்குக் கூட அந்த அனல்மின் நிலையம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என்று நிரூபிக்க முடியாவிட்டால், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகத் தயாராக இருக்கிறாரா?

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அதானி கடந்த ஜூலை மாதம் இரகசியமாக சந்தித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தி இருந்தது. கடந்த 5 மாதங்களாக இதுகுறித்து மௌனம் சாதித்து வந்த திமுக அரசு, இப்போதுதான் அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது. அப்படியானால், அத்தகைய சந்திப்பு நடந்ததாக செய்திவெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்குத் தொடுக்க அரசு தயாரா?

கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் கையூட்டு வாங்கி, அவர்களை நடுத்தெருவுக்கு அழைத்துவந்த செந்தில்பாலாஜி, அவரது எஜமானர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் போலவே தம்மையும் சர்வாதிகாரியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கிறார். செந்தில் பாலாஜியையும், அவரது எஜமானர் மு.க.ஸ்டாலின் அவர்களையும்விட வலிமையான தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் பா.ம.க. ஒருபோதும் அஞ்சாது.

செந்தில் பாலாஜிக்கு துணிச்சல் இருந்தால், அதானி குழுமத்திடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் கையூட்டுப் பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக பா.ம.க. முன்வைத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் வழக்குத் தொடரட்டும். அந்த வழக்கை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொள்ள பா.ம.க. காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+