“சனாதனம் பேதம் சமன் செய்யும்.. பழங்குடிப் பவளமே” ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி எனும் இளம்பெண் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வாகியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் தனக்கே உரிய பாணியில் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கல்வி அறிவில் பின் தங்கிய மாவட்டமாக வட ஆற்காடு மாவட்டங்கள் இருக்கின்றன. ராணிப்பேட்டை தொடங்கி திருப்பத்தூர் வரை வட ஆற்காடு மாவட்டங்கள்தான். அதிலும், ஜவ்வாது மலை போன்ற பெரியதாக எந்த வசதிகளும் இல்லாத கிராமங்களிலிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் ஏராளமான சவால்களை சந்தித்து கல்வியை பெறுகின்றனர்.

இந்த சவால்கள் நிறைந்த பாதையில் பயணித்து தற்போது உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வாகியிருப்பவர்தான் ஸ்ரீபதி. 23 வயதான இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைக்கிராமமான புலியூரை சேர்ந்தவராவார். சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது இவருக்கு திருமணமாகியுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு படிக்க கணவர் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். எனவே உரிமையியல் நீதிபதிக்கான தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார்.
ஆனால், இவருக்கான பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஏறத்தாழ ஒரே நாளில் வந்திருக்கிறது. ஆனால் நல்வாய்ப்பாக தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாக பிரசவித்த பெண்கள் குறைந்தது 1 மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெறும் இரண்டே நாட்களில் புலியூர் மலை கிராமத்திலிருந்து சென்னை வந்து, தேர்வெழுதியிருந்தார் ஸ்ரீபதி. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இதில் இவர் தேர்ச்சியடைந்திருக்கிறார்.
23 வயதான பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபதியின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்துவும் தனது பாணியில் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கவிதையில்,
“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்
சனாதன பேதம்
சமன் செய்யும்
ஆதி அவமானம் அழிக்கும்
விலங்குகட்குச் சிறகுதரும்
அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்
விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்
கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி
உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்
வளர்பிறை வாழ்த்து!”
என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications