ஸ்பீக்கரில் சத்தமாக பாட்டு போட்டதால் மோதல்.. தம்பி கொலை, அண்ணன் சீரியஸ்.. பல்லாவரத்தில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள புதிய மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (50). இவரது சகோதரர் ஞானசம்பந்தம் (45). சகோதரர்களான இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாலையோரத்தில் வசித்து வருகின்றனர்.
அடிதடி உள்ளிட்ட சிறு சிறு குற்றச் சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பல்லாவரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான ராஜேஷ் குமார் (34), புதிய மீன் மார்க்கெட் பகுதியில் பெரிய விநாயகர் சிலையை வைத்துள்ளார்.

அதிக ஒலியில் பாடல் சத்தம்
மேலும், விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே அங்கு ஒலிப்பெருக்கிகளை வைத்து சத்தமாக பாடல்களையும் போட்டுள்ளார். இரவும், பகலுமாக தொடர்ந்து அங்கு ஒலிப்பெருக்கிகளில் பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது. இது, சாலையோரத்தில் வசிக்கும் சரவணன், ஞானசம்பந்தம் குடும்பத்தினருக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தான் வைத்திருந்த விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதற்காக ராஜேஷ் குமார் வந்துள்ளார்.

தகராறு
அப்போது சரவணனும், ஞானசம்பந்தமும் ராஜேஷ் குமாரிடம் பாடல்கள் அதிக சத்தமாக இருப்பதாகவும், சற்று ஒலியை குறைக்குமாறும் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ராஜேஷ் குமாரை சரவணன் - ஞானசம்பந்தம் சகோதரர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இன்னும் சில தினங்களில் ராஜேஷ் குமாரை கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தீர்த்துக் கட்ட திட்டம்
இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் குமார் தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள், "சரவணனும், ஞானசம்பந்தமும் ரவுடிகள். எனவே உன்னை நிச்சயம் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்" எனக் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன ராஜேஷ் குமார், அவர்கள் தன்னை கொலை செய்வதற்கு முன்பு நாம் முந்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது நண்பர்கள் 7 பேரை சேர்த்துக் கொண்டு சரவணன், ஞானசம்பந்தத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

கொலை - கைது
இந்நிலையில், சரவணன், ஞானசம்பந்தம் இருவரும் நேற்று இரவு பம்மல் மீன் மார்க்கெட் பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜேஷ் குமாரும், அவரது நண்பர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஞானசம்பந்தம் இறந்துவிட்டார். சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இந்தக் கொலையில் தொடர்புடைய ராஜேஷ் குமார் (34), செல்வன் (30), ஜெயகுமார் (32), வசந்தகுமார் (28) உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அதிக சத்தத்தில் பாடலை வைத்ததால் எழுந்த சாதாரண மோதல், கொலையில் முடிந்தது பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications