உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள்.. போலீஸ் விசாரிக்க முடியாது.. ஹைகோர்ட்
சென்னை: உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை காவல்துறை விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களுருவில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கடந்த ஜனவரி 14 ம் தேதி கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்ததில், 3 ஆயிரத்து 500 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக குடோன் உரிமையாளர் தங்கராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது பரமத்தி காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை பொருள் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி குடோன் உரிமையாளர் தங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க தனி அதிகாரிகள் இருப்பதாகவும், இந்த பிரிவுகளின் கீழ் தொடர்ப்படும் வழக்குகளை காவல்துறையினர் விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை கைவிடும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டம், சிகரெட், புகையிலை பொருட்கள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காவல்துறை விசாரிக்க வேண்டும் என கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications