தொற்று நோய் பரவல் தடுப்பு உட்பட 4 பிரிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு
சென்னை: வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்... சொல்வது டி.ஆர் பாலு
உதயநிதி மீது 4 பிரிவுகளில் வழக்கு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம், சென்னை பெருநகர காவல் சட்டம், சட்டவிரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ மீது வழக்கு
மேலும் கந்தன்சாவடி பகுதியில் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், இளங்கோவன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேஎஸ் அழகிரி
கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய பாலகிருஷ்ணன் மீது வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொருக்குப்பேட்டை பகுதியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மீது, கொருக்குப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருமாவளவன், துரைமுருகன்
கடலூரில் போராட்டம் நடத்திய திருமாவளவன், வேலூரில் போராட்டம் நடத்திய துரைமுருகன், திருச்சியில் தர்ணா நடத்திய கே.என்.நேரு, கரூரில் போராட்டம் நடத்திய செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, காவல்துறையினர் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.