அண்ணாமலையுடன் ஒப்பீடா? மனநலம் பாதித்தவர்களை இழிவுபடுத்திட்டாரு - நிர்மல் குமார் மீது போலீசில் புகார்
"மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது"
சென்னை: பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக வெளியிட்ட கடிதத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக கூறி அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் புகார்.
நேற்று ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்ட நிர்மல் குமார் "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்றார்.
அத்துடன் ஒரு கடிதத்தையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அதில்தான் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல், அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டு இருந்தார்.

பல நூறு முறை சிந்தித்தேன்
அதில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

அல்பத்தனம்
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற எதுவும் இல்லை.

மனநலம் குன்றிய மனிதரை போல்..
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

அமைச்சருடன் பேச்சு
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

கட்சியினரை ஏமாற்ற நினைக்கும் தலைமை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

போலீசில் புகார்
இந்த நிலையில், இந்த கடிதம் தொடர்பாக நிர்மல் குமார் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பாஜகவில் இருந்து விலகுவதாக நிர்மல் குமார் அறிவித்த கடிதத்தில், அண்ணாமலையை மனநலம் பாதிக்கப்பட்டுவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை இழிவுபடுத்திவிட்டதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பை நடத்தி வரும் மணிகண்டன் என்ற வழக்கறிஞர் புகாரளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications