சூடு பிடிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு.. யார் அந்த அரசியல்வாதி?.. ஹேமந்திற்கு இறுகும் பிடி
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கில் ஹேமந்த் நடுவில் புகுந்து சில தகவல்களை அளித்ததால் அந்த வழக்கு தற்போது சூடு பிடிக்கிறது.
நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் ஒன்றரை ஆண்டுகளாக துப்பு ஏதும் துலங்காத நிலை உள்ளது.
இந்த நிலையில் அவரது கணவர் ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் தாய், தந்தை புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

அமைதி
வந்ததும் சில நாட்களுக்கு அமைதியாக இருந்த ஹேமந்த் திடீரென தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மீடியாவில் வந்த ஹேமந்த், சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள்தான் என்னை கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

சித்ரா மரணம்
சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் யாரென தெரியும். எனக்கு ஏதாவது நேர்ந்தால் மரணத்திற்கு காரணமானவர்களின் பட்டியல் போலீஸாருக்கு போய்விடும். சித்ராவின் மரணத்திற்கு மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர், போதை பொருள் கும்பல், சின்னத்திரை நடிகர் ஆகிய 4 பேருக்கு தொடர்புண்டு என்றார்.

விவகாரம் சூடு பிடித்தல்
இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்கிறது. ஆனால் இவர் சொல்லும் விவகாரங்களை ஏன் போலீஸ் விசாரணையில் சொல்லவில்லை. இப்போது உயிருக்கு ஆபத்து என சொல்கிறாரே அப்போதே இந்த விவரங்களை போலீஸிடம் கூறியிருக்கலாமே, சித்து போனதும் தானும் உயிரிழந்திருக்க வேண்டும், இந்த உண்மைகளை சொல்லத்தான் உயிருடன் இருக்கிறேன் என்கிறாரே இதை ஏன் சித்ரா இறந்தவுடன் சொல்லவில்லை? என கேள்விகள் எழுகின்றன.

ஹேமந்த்
ஹேமந்த் தன்னை நல்லவர் என காட்டிக் கொள்ள பழியை தூக்கி அரசியல்வாதி மீது போடுகிறாரா, இல்லை நிஜமாகவே சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிக்கு தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. அது போல் சித்ராவின் தாயார் முந்தைய பேட்டிகளில் இறப்பதற்கு முதல் நாள் ஷூட்டிங்கின் போது எனது மகள் சந்தோஷமாக இருந்தார். ஹேமந்த்தான் அடித்து கொன்றிருக்கிறார் என்றார்.

முரண்பாடாக பேட்டி
ஆனால் அண்மையில் ஒரு பேட்டியில் எனது மகள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் முகமே சரியில்லை, வயிற்றில் புளி கரைப்பது போல் அவரது முகம் இருந்தது. அதுவும் கருப்பாக இருந்தது, நான் என்ன என கேட்ட போது ஒன்றுமில்லை என்றார். உடனே ஹேமந்த்தும் சித்ராவை வெளியே அழைத்து சென்றுவிட்டார் என்றார்.

சூடு பிடிக்கும் வழக்கு
இது போல் இரு தரப்புமே மாறி மாறி முரண்பாடாக கூறி வருவதால் இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். முதலில் ஹேமந்த்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது சித்ரா இறப்பதற்கு முன்னர் தன்னிடம் சில தகவல்களை சொன்னதாக ஹேமந்த் கூறியிருந்தது குறித்து போலீஸார் விசாரிக்கலாம் என தெரிகிறது. பிறகு தேவைப்பட்டால் சித்ராவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே இந்த வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது. நீதிமன்றத்திலும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications