ஆருத்ரா மோசடி.. பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்! அதிரடி ஆக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டையே அதிர வைத்த ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் இயங்கி வந்தது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ளது.
இவர்கள் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி விளம்பரம் செய்தார்கள். இதில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக அறிவித்தார்.
ஆருத்ரா: இவர்களின் இந்த விளம்பரத்தை நம்பி பல ஆயிரம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். அப்படியே சுமார் 2400 கோடி ரூபாயை அவர்கள் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை வசூலித்த அவர்கள், முதல் சில மாதங்கள் வட்டி கொடுத்துள்ளனர். இருப்பினும் அதன் பின்னர் சொன்னபடி வட்டி தரவில்லை. அதேபோல போட்ட பணத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குத் தராமல் இழுத்தடித்ததாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாஜக நிர்வாகியும் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ஹரிஷை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
ஆர் கே சுரேஷ்: விசாரணையில் ஹரீஷ் பாஜகவில் பொறுப்பைப் பெற முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தியாக கூறினார். மேலும், இந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கியுள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து ஹரீஷின் சொத்துக்களை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். மேலும், ஆருத்ரா நிறுவனத்திற்குச் சொந்தமான 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.
இதில் கணக்கில் வராத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீாசார், இதுவரை 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். மேலும், சில வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த பண மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்கே சுரேஷ் பாஜகவிலும் உள்ளார்.

லுக்அவுட் நோட்டீஸ்: பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை வளையத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் விசாரணை இருந்துள்ளார். இருப்பினும், விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. போலீஸ் சம்மனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இருப்பினும், இதற்கு உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போலீசார் சம்மனுக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முடியாது.












Click it and Unblock the Notifications