சென்னையில் பரிதாபம்.. கார் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.. மாஜிஸ்திரேட்டு மகன் அதிரடி கைது!
சென்னை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி குழந்தை இறந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். துணி இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது மனைவி சித்ரா, மகன் பார்கவ் (6), மகள் சாய் தன்ஷிகா (3) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு புது துணி எடுப்பதற்காக தியாயராய நகர் சென்றார்.
தியாகராய சாலை சந்திப்பு அருகில் செல்லும்போது வேகமாக வந்த கார் ஒன்று ஜெயராமனின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்ததில் ஜெயராமனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
என்னாச்சு.. தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று.. சென்னை மீண்டும் டாப்.. என்ன காரணம்?
அனைவரும் காயம்
பின்னால் அமர்ந்து வந்த ஜெயராமனின் மகன் பார்கவுக்கு கை, காலில் லேசாக சிராய்ப்பு காயமும், மனைவி சித்ராவுக்கு இடது பக்க தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர்.
குழந்தை உயிரிழப்பு
ஆனால் 3 வயது பெண் குழந்தை சாய் தன்ஷிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாஜிஸ்திரேட்டு மகன்
இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவராய் பொய்யான குற்றவாளியை சரணடைய வைத்ததாக குழந்தையின் தந்தை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மாஜிஸ்திரேட்டு மகன் அஜய் சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
கைது செய்தனர்
இதனையடுத்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியஅஜய் சுப்பிரமணியனை போலீசார் இன்று கைது செய்தனர் . அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது குழந்தையின் இறப்புக்கு உரிய ஞாயம் கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தையின் தந்தை ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.