கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்.. ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
Recommended Video
சென்னை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடிகையை காண வந்த ரசிகர்களை போலீசார் அடித்து விரட்டியதால் , பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் நகைக்கடையின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இக்கடையின் திறப்பு விழா நேற்று நடைபெறும் என்றும், இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்வர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
[இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்]
குவிந்த ரசிகர்கள்
இதையடுத்து அங்கு காலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரளத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து, சாலை முழுவதும் கூட்டமாகக் காணப்பட்டது.
ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும், சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகைக்கடை திறந்த கீர்த்தி சுரேஷ்
இதனால் அச்சாலையில் போக்குவரத்தை போலீசார் முற்றாக தடை செய்தனர். இதனிடையே ரசிகர்களின் உற்சாக முழக்கத்திற்கிடையே காரில் வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நடனமாடி அசத்தல்
பின்னர், சாலை மறித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றி கையசைத்ததோடு, சிறிது நேரம் பேசி நடனமாடினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் ரசிகர்களின் கும்பலுக்கிடையே கார் மாட்டிக் கொண்டதோடு, நகர முடியாமல் நின்றது.
தடியடி
காருக்கு வழிவிடாத ரசிகர்களால் மீண்டும் நெரிசல் உருவானதையடுத்து அங்கு வந்த போலீசார், ரசிகர்களை அடித்து விரட்டினார். பலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அடிதாங்க முடியாமல் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.