‘திருட வந்தீங்களா’ - ரயில் விபத்து மீட்பு பணிக்கு ஓடோடி வந்த கவரைப்பேட்டை மக்களை மிரட்டிய போலீஸ்
சென்னை: திருவள்ளூர் கவரைப்பேட்டை பகுதியில், சரக்கு ரயில் - எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தில் மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் அந்த மக்களை மிரட்டி அசிங்கமாக பேசியதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே கடந்த 11ம் தேதி சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. மைசூர் - தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த 13 பெட்டிகள் தடம் புரண்டு தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிர்ஷ்டவசமாக சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களில் காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் இறங்கியது. உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் இறங்கினர்.
முக்கியமாக இந்த விபத்தின் மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பொன்னேரி அருகே டமார் என்ற பலத்த சத்தம் கேட்க உள்ளூர் மக்கள் அலெர்டாகி உள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோதே, ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.
உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணியை தொடங்கினார்கள். அவர்களே பயணிகளை மீட்டு, தண்ணீர் கொடுத்து தங்களால் முடிந்த முதலுதவிகளை செய்துள்ளனர். இதைதொடர்ந்து பயணிகளும் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அடுத்தடுத்து வருகை புரியும் நிலையில், அவர்களுக்கும் கைக்கொடுத்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
இதற்காக பயணிகள் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர். ஆனால், காவல்துறை அந்த மக்களை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அந்த மக்கள், நாங்கள் தான் மீட்புப் பணியில் முதலில் தொடங்கினோம். காவல்துறை தாமதமாக தான் வந்தது. குடத்தை அவ்வளவு தூரம் தண்ணீர் எடுத்து சென்று, எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தோம். நாங்கள் 12 மணி வரைக்கும் மீட்புப் பணியில் இருந்தோம். அப்போது காவல்துறையினர் உங்கள் மீது வழக்குப்போடுவோம் என மிரட்டி அசிங்கப்படுத்தினார்கள்.
6 மணிக்கு மேல் அந்த பக்கமே போக மாட்டோம். அங்கு அவ்வளவு பாம்புகள் இருக்கும். இருப்பினும் மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் சென்றோம். காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தோம். சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாறி மாறி போன்செய்து தகவல் சொல்லியும், சற்று தாமதமாக தான் வந்தனர்.
அதற்குள் நாங்கள் எரிந்து கொண்டிருந்த ரயில் பெட்டியில் இருந்தவர்களை எல்லாம் மீட்டுவிட்டோம். ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகளை காப்பாற்றினோம். இதில் எங்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஒருபக்கம் டமால் டமால் என்று வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு உள்ளே வருவதற்கு வாய்ப்பு இல்லை.
நாங்கள்தான் குடங்களிலும், பக்கெட்டிலும் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தோம். சில காவல்துறை அதிகாரிகள், இங்க என்ன திருட வந்துள்ளீர்களா என கேட்டு அசிங்கப்படுத்தினார்கள். இதுதான் எங்களை மிகவும் பாதித்தது. என்றனர்.












Click it and Unblock the Notifications