பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ஸ்கெட்ச்? ஷாக்கை கிளப்பும் ஆருத்ரா மோசடி.. சாட்டையை சுழற்றும் போலீஸ்
சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ள பொருளாதார குற்ற பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ஹரீஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நிறுவனத்தில் பண முதலீடு செய்ததால் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்டு நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்தது. இதன் தலைமையிடம் சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியின்படி பணத்திற்கு போதிய வட்டி கொடுக்கப்படாமல் நிறுவனம் சமாளித்து வந்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்கள் குவிய தொடங்கியதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி வரை முதலீடு பெற்று அதற்கான வட்டியை கொடுக்காமல் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2022ம் ஆண்டு மே மாதம் வரை இந்நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. இதனையடுத்து இந்நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர் ரெய்டில் பணம், தங்க நகைள், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

வழக்குப்பதிவு
மட்டுமல்லாது நிறுவனத்தின் மீதும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். இதில் 9ஆவதாக உள்ள நபர்தான் ஹரீஷ். இவர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராவார். மேற் குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் ரூ.210 கோடி அளவில் முதலீடுகளை இவர் இந்நிறுவனத்திற்காக பெற்றிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதையடுத்து தலைமறைவாக இருக்க தொடங்கினார். இந்த அளவுக்கு முதலீடுகளை பெற்ற பின்னர் சுமார் 30 சொத்துக்களை தன்னுடைய பெயரிலும் தன்னுடைய உறவினர்கள் பெயரிலும் வாங்கியிருக்கிறார்.

முன்ஜாமீன்
அதேபோல இந்த வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்கவும் திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்துதான் இவரின் வனவாச காலம் தொடங்கியது. புதுச்சேரி, மும்பை, டெல்லி என பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்றிருக்கிறார். இருப்பினும் காவல்துறை இவரை பின்தொடர்வதை நிறுத்தவில்லை. அப்போதுதான் மற்றொரு சம்பவம் நடந்தது. அதாவது, இதே மே மாதம் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார்.

வரவேற்பு குழுவில் இடம்
அவரை வரவேற்க பாஜக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த வரவேற்பு குழுவில் ஹரீஷ் இடம் பெற்றிருந்தார். காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நபர் பிரதமரை வரவேற்கும் குழுவில் இடம் பெற்றிருந்தது பேசுபொருளானது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி ஹரீஷ் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில்தான் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் ஹரீஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இடையில் பண பரிவர்த்தனை நடைபெற்றிருக்கிறது. ஹரீஷிடமிருந்து பெற்ற பணத்தை கொண்டுதான் சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கைது
மட்டுமல்லாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வைத்து தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது குடும்ப நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக சுரேஷ் நடத்தியிருந்தார். இந்த விவகாரங்களை அறிந்த காவல்துறையினர் இவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் சுரேஷ் ஏற்கனவே துபாய் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 24ம் தேதி ஹரீஷ் பெங்களூரிலிருந்து சென்னை வந்துக்கொண்டிருந்தபோது வேலூர் மாவட்டம் ஆற்காடு மேல் விஷாரம் அருகே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில்தான் மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மேலதிக தகவல்களுக்கு சுரேஷை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications