100 நாளில் 10000 கொடி கம்பங்கள்! சவால் விட்ட அண்ணாமலை.. ஆரம்பமே ஊத்திகிச்சி! போலீஸார் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அருகே, சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே, பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்து இருந்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் ஆட்சேபம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் பாஜகவினரும் அங்கு திரண்டு வந்துவிட்டனர். இரு தரப்பிலும் ஒன்றாக கூடிவிட்டதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் அந்த கொடி கம்பத்தை போலீஸார் அகற்ற வந்தனர்.
அப்போது அதை பாஜகவினர் தடுத்த முயற்சித்தனர். இதையடுத்து போலீஸார் பாஜகவினர் சிலரை கைது செய்தனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொடி கம்பம் நட இன்று பாஜகவினர் ஆயத்தமாகினர். சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல் துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் அனுமதி கடிதம் இணைக்கப்படவில்லை என காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கொடிக் கம்பம் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே அனுமதியுள்ள இடங்களில் கூட புதிய கொடிக் கம்பம் வைக்க போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications