மாஜி அமைச்சர் சி.வி. சண்முகம் புகார்- சசிகலா உட்பட 500 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு
சென்னை: தமக்கும் தமது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனை பயன்படுத்தி அதிமுகவை மீண்டும் கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டு வருகிறார்.
ஆனால் சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கப் போவது இல்லை என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. இதற்காக தமிழகத்தின் அதிமுக மாவட்டங்களில் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சசிகலாவின் ஆடியோ அரசியல்
இதையெல்லாம் கண்டுகொள்ளாத சசிகலா, ஒவ்வொருநாளும் அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ உரையாடலை வெளியிட்டு வருகிறார். இந்த உரையாடல்களில் அதிமுகவை எப்படியும் மீண்டும் தம் வசமாக்குவேன் என சசிகலா கூறி வருகிறார்.

விழுப்புரம் தீர்மானம்
இதனிடையே விழுப்புரம் அதிமுக மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். அவரை ஊழல்பேர்வழி, ஊரை கொள்ளையடித்தவர் என்றார். அத்துடன் கருவாடு மீன் ஆகலாம்; ஆனால் சசிகலா அதிமுகவில் மீண்டும் சேரவே முடியாது என திட்டவட்டமாக ஆவேசமாக கூறினார்.

சி.வி. சண்முகம் போலீசில் புகார்
இதன்பின்னர் கடந்த 9-ந் தேதி விழுப்புரம் அருகே ரோசனை காவல்நிலையத்தில் சி.வி. சண்முகம் ஒரு புகார் கொடுத்தார். அதில் சசிகலாவின் தூண்டுதலின் பேரில் 500க்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் அழைத்து என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைத்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

சசிகலா மீது வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரோசனை போலீசார், சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 501(1),507, 109 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications