2 வயதில் மாயமான பெண் குழந்தை! 13 வயதில் எப்படி இருப்பார்? சிங்கார வேலன் பட பாணியை கையாளும் போலீஸ்!
சென்னை: சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க போலீஸார் சிங்கார வேலன் பட பாணியை கையில் எடுத்துள்ளனர்.
கமல்ஹாசன், குஷ்பு நடித்த படம் சிங்காரவேலன். இதில் கமலின் அத்தை மகளான குஷ்புவைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவருடைய தாய் கட்டளையிடுவார். இதனால் குஷ்புவை தேடி சென்னையில் தனது நண்பர் பாடகர் மனோவின் வீட்டுக்கு கமல் செல்கிறார்.

அங்கு கவுண்டமணி, சார்லி, வடிவேல் உள்ளிட்டோருடன் ஒரே சிரிப்பாக இருக்கும். ஒரு கட்டத்தில் தான் தனது அத்தை மகளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்திருப்பதாக கூறி அத்தை மகளின் பெயர் சுமதி, மார்பில் மச்சம், 3 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டுவார்.
இந்த குழந்தை தற்போது எப்படி இருப்பார் என அறிய கம்ப்யூட்டர் சென்டருக்கு கமல் தனது நண்பர்களுடன் செல்வார். அதில் 18 வயதில் அந்த பெண் எப்படியிருப்பார் என்பதை புகைப்படமாக எடுத்து கொடுப்பார் அங்கிருக்கும் பெரியவர். இதை பார்த்த போது இது போல் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வி படம் பார்த்த நமக்குள் எழுந்திருக்கும்.
கிட்டதட்ட அதே போல் செயற்கை நுண்ணறிவு மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணேஷ்- வசந்தி என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தை கவிதா. இவர் ஒன்றரை வயதாக இருக்கும் போது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாயமாகிவிட்டார். அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் அளித்து பல்வேறு விதமாக முயற்சித்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் காவல் துறை தொடர்ந்து முயற்சி செய்தது.
இந்த நிலையில் குழந்தை காணாமல் போன வழக்கை காவல் துறை ஆணையராக இருந்த ஜே.கே.திரிபாதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய முயற்சியின் பேரில் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவில் விசாரணை நன்றாக சென்று வந்த நிலையில் அதிகாரிகள் மாற்றத்தால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த ஆட்கொணர்வு மனுவும் பெற்றோருக்கு தெரியாமல் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி குழந்தையை கோயில்களிலும் ஜோசியர்கள் மூலமாகவும் நம்பிக்கையுடன் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைக்கப் போவதாக போலீஸார் அறிவித்த நிலையில் அதற்கு பெற்றோர் 2023 இல் மறுப்பு தெரிவித்தனர். எனினும் வழக்கை முடித்து வைத்ததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது , குழந்தையை கண்டுபிடிக்காதது காவல் துறையின் தவறு, அப்படியிருக்கையில் எப்படி வழக்கை முடித்து வைக்கலாம் என நீதிபதிகள் கேட்டனர்.
இதையடுத்து 6 மாதங்களில் குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு காணாமல் போன போது எடுத்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவில் போட்டு அந்த குழந்தை 13 வயதில் எப்படி இருப்பார் என்பதை உருவாக்கியுள்ளனர். அதை கொண்டு குழந்தையை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குழந்தை அழகாக இருப்பதால் பெற்றோர் உருக்கமாக இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications