சென்னை தரமணியில் சோகம்.. விபத்தை ஏற்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.. உயிரையே விட்ட போலீஸ்காரர்
சென்னை: சென்னை தரமணி அருகே இன்று காலையில், உடலில் பெட்ரோல் ஊற்றி போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மதுபோதையில் காரை ஓட்டி சென்று இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விபத்தை ஏற்படுத்தியதால் குற்ற உணர்ச்சியில் இருந்த போலீஸ்காரர் இன்று காலையில் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை தரமணி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் செந்தில். நாகப்பட்டினத்தை சேர்ந்த இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நேற்று மாலை 5.30 மணியளவில் செந்தில் கிண்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

மது போதையில் காரை ஓட்டி விபத்து
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மடுவின்கரை மேம்பாலத்தில் சென்றபோது கார் கட்டுபாடின்றி சென்றதாக கூறப்படுகிறது. இதில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது அவரது கார் வேகமாக மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். விசாரணையில் அவரது பெயர் முருகேசன் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்திலை மற்ற வாகன ஓட்டிகள் விரட்டி சென்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே பிடித்தனர். பின்னர் செந்திலை பிடித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.
மன உளைச்சலில் இருந்தார்
தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். காயமடைந்தவர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதால், தலைமைக் காவலர் செந்தில் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்தி பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை பார்த்து செந்தில் மன உளைச்சல் அடைந்துள்ளார். எனினும் இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் காலை 11 மணியளவில் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஆஜராகும் படி அறிவுறுத்தப்படது. அதன்பேரில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.
பைக்கிலிருந்து பெட்ரோலை எடுத்து..
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே தரமணி ரயில்வே மைதானம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் இருந்த பெட்ரோலை வாட்டர் கேனில் எடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து திடீரென அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மற்றவர்களுக்கு உதாரணமாக தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய போலீஸ்காரரே மன உளைச்சலில் இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications