உயிரையே காப்பாற்றி நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கூவம் ஆற்றில் சிக்கிய பழனிக்கு கடவுளாக வந்த காவலர்
சென்னை: சென்னை சூளைமேடு கோசுமணி தெருவை சேர்ந்த பழனி என்பவர் அங்கு வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு தேங்காய்கள் என்றால் கொள்ளை பிரியம். இவர் வீட்டின் அருகே கூவம் ஆறு ஓடுகிறது. கடந்த சில நாட்களாக கூவம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில் அதில் மிதந்து வந்த தேங்காயை எடுக்க பழனி குதித்ததால், கூவம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை சூளைமேடு போலீசார் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
வடகிழக்கு பருவமழை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிறைந்துவிட்டன. உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அடையாறு, கொசஸ்தலை, கூவம் என சென்னையில் ஓடும் மூன்று ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் யாரும் இறங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் ஆற்று பகுதிகளில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூளைமேடு கோசுமணி தெருவில் 74 வயதாகும் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு தேங்காய்கள் என்றால் கொள்ளைபிரியம். தேங்காயை எங்கு பார்த்தாலும் தன்வசம் எடுத்து வைத்துக்கொள்வாராம். சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் பழனியின் வீட்டின் அருகே ஓடும் கூவம் ஆற்றில் தேங்காய்கள் மிதந்து வந்துள்ளதாம். அதை பார்த்த பழனி சற்றும் தாமதிக்காமல் ஆற்றுக்குள் இறங்கி தேங்காயை எடுக்க சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரது கால் கூவத்தில் கிடந்த பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் சிக்கியதால் உயிருக்கு போராடியிருக்கிறார்.. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின்பேரில், சென்னை சூளைமேடு சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், போலீஸ்காரர் சரத்குமார் மற்றும் மேலும் சில போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பழனி ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் சரத்குமார் ஆற்றில் குதித்து பழனியை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அவருக்கு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பழனி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். கூவம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவரை காப்பாற்றிய சூளைமேடு போலீசாரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications