போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு… அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு
Recommended Video

மதுரை: போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் .

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 10-ந்தேதி சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளது என்றார்.
அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் ஆனந்தமுருகன் ஆஜராகி, போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்படுவது இல்லை என்று வாதாடினார்.
இதனை அடுத்து பேசிய நீதிபதிகள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகி உள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால் மக்களை எளிதாக சென்றடையும் என கருத்து தெரிவித்தனர் .
எனவே தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் , நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா ஆகியோர் இவ்வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர் . மேலும், இந்த வழக்கு குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications