சுற்றுச்சூழல் துறையா? சுற்றுலாத்துறையா? தனது துறை என்னவென்றே தெரியாமல் உளறிய தவெக அமைச்சர்!
சென்னை: புதிய ரத்தம் பாய்ச்சும் விதமாக தவெக அமைச்சரவையில் பல இளம் முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புதிய பொறுப்புகளை ஏற்ற அமைச்சர்கள் தங்களது துறையின் கீழ் வரும் திட்டங்களை வேகமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில இளம் அமைச்சர்களின் பேச்சுகள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதன் உச்சமாக, அமைச்சர் ஒருவர் தான் எந்தத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறோம் என்பதையே செய்தியாளர் சந்திப்பில் மாற்றிப் பேசி, அங்கிருந்தவர்களையும் நெட்டிசன்களையும் கன்ஃபியூஸ் ஆக்கியுள்ளார்.

அமைச்சர் ராஜீவ் தடுமாற்றம்
பொதுவாக 'சுற்றுச்சூழல் துறை' மற்றும் 'சுற்றுலாத்துறை' ஆகிய இரண்டு வார்த்தைகளும் உச்சரிப்பில் சற்றே நெருக்கமாக இருப்பவை. ஆனால், ஒரு துறையின் செயல்பாட்டிற்கும் மற்றொரு துறையின் செயல்பாட்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.
திருவாடானை சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற ராஜீவ், விஜய்யின் அமைச்சரவையில் அமைச்சர் ஆகியுள்ளார். வி.கே.ராஜீவ். தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சுற்றுலாத்துறையா? சுற்றுச்சூழல் துறையா
சமீபத்தில் பிரஸ் மீட்டில் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு குறித்துப் பேசுவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகத் தனது துறையையே 'சுற்றுலாத்துறை' என்று மாற்றி சொல்லத் தொடங்கினார்.
முதலில் ஏதோ டங்க் ட்விஸ்ட் ஆகி ஒருமுறை அப்படிப் பேசுகிறார் என்று நினைத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும், அடுத்தடுத்து அவர் அதே வார்த்தையைப் பயன்படுத்தியபோதுதான் புரிந்தது, பாவம், அமைச்சரே முழுமையாகக் குழம்பிப் போய்விட்டார் என்று. பின்னர், உங்கள் துறை வேறு என்று சொன்னவுடன், சுதாரித்துகொண்டார்.
திணறும் இளம் அமைச்சர்கள்?
அரசியல் அனுபவமும், மேடைப் பேச்சுகளில் பழுத்த ஞானமும் கொண்ட மூத்த தலைவர்களுக்கு மத்தியில், புதிய மற்றும் இளம் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்களின் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
"தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்று அவருக்கே தெரியவில்லை என்றால், அந்தத் துறை எப்படி உருப்படும்?" என்ற காரசாரமான கேள்விகளும் எழுந்துள்ளன.
இனிவரும் காலங்களிலாவது பொதுவில் பேசுவதற்கு முன்னால் அமைச்சர்கள் ஹோம்-ஒர்க் செய்துவிட்டுப் பேசுவார்களா, அல்லது இது போன்ற நகைச்சுவைகள் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications