ரஜினிகாந்தின் உடல்நிலை... விழுந்து விழுந்து விடாமல் விசாரிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அத்தனை கட்சித் தலைவர்களும் இடைவிடாமல் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் ஆக்டிவ் அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா? என்பதே அனைவரின் விசாரணைகளிலும் முக்கியமான கேள்வியாகவும் உள்ளது.
ரஜினிகாந்தை தேர்தல் அரசியலுக்குள் தள்ளிவிடுவதில் பாஜக படு முனைப்பாக இருந்தது. கொரோனாவை பயன்படுத்தி தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் ரஜினிகாந்த் தயாராக இருந்தார்.

ஜனவரியில் கட்சி
ஆனாலும் கடுமையான நெருக்கடிகளால் வேறுவழியே இல்லாமல் ஜனவரியில் கட்சியை தொடங்கப் போகிறேன்; இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ல் வெளியாகும் என அறிவித்தார் ரஜினிகாந்த். இந்த அறிவிப்புடன் ஐதராபாத்துக்கு போய் அண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அண்ணாத்தே படப்பிடிப்பு ரத்து
ஆனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரஜினிகாந்த் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த் அதிக ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினாலும் மருத்துவர்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை?
இதனால் ரஜினிகாந்த் திட்டமிட்டபடி அரசியல் கட்சியை தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லைதான். இதனிடையே ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்த போதும் டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் அவரது மருத்துவர்களை தொடர்பு கொண்டு துருவி துருவி விசாரித்து வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.

தலைவர்கள் தீவிர விசாரணை
தற்போதைய உடல்நிலையின் அடிப்படையில் ரஜினிகாந்தால் கட்சி தொடங்க முடியுமா? கட்சி தொடங்கினாலும் தீவிரமாக பிரசாரம் செய்ய இயலுமா? என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு மருத்துவர்களை அசர வைக்கின்றனராம். பெரும்பாலான தலைவர்களின் விசாரிப்புகளில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பு இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications