சூப்பர்... "இந்த" விஷயத்தில் பாஜகவை விட ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை.. ஆனால் அதிமுக சுதாரிக்கணும்!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்
சென்னை: கொரோனா பரவல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்கிறார்கள். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை எட்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களால் மக்களுக்கு கொரோனா மிகப் பெரிய அளவில் பரவும் பேராபத்து அதிகரித்து வருகிறது.
ஆம், அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் சரி உரிய பாதுகாப்பு நடைமுறைகள், தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிவது என எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல்தான் 90 சதவீத கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் மக்கள் தலையில்தான் போய் விடியப் போகிறது.
மக்கள் கூட்டமாக போகக் கூடாது, முகக் கவசம் அணியாமல் வெளியே போனால் அபராதம் என அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை, விதிகளை விதித்து அதை பின்பற்றி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் மட்டும் இதையெல்லாம் மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு கூட்டம் கூட்டுவது, பேரணி நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று திரிந்து கொண்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடையை வைத்துள்ளது.

தொண்டர்கள்
இப்படித்தான் சென்னையில் சமீபத்தில் திமுக மகளிர் அணியின் போராட்டம் நடைபெற்றது. அதற்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டனர். கொரோனா பரவல் அச்சத்தைத் தாண்டி இவர்கள் இப்படி அணிவகுத்ததால் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. இதுபோன்று பெருமளவில் மக்கல் திரண்டால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா.. நிச்சயம் இருக்காது. ஆனால் அரசியல் கட்சியினர் மட்டும் இப்படி இஷ்டத்திற்கு அணி திரள்வது எந்த வகையில் சேரும் என்று தெரியவில்லை.

பாராட்டு
அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும். அவர் நடத்தும் கூட்டங்களில் சற்று கவனம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரிய அளவில் கூட்டம் கூடினாலும் கூட தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள். அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்கிறார்கள். மிகுந்த கவனத்துடன் அனைத்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதை திமுகவின் மற்ற அணியினரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதுதான் மக்களுக்கு நல்லது.

மக்கள் நலன்
அரசியல் கட்சிகள்தான் இப்போது பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக அளவில் மக்கள் நலன் தொடர்பான திட்டத் தொடக்க விழாக்கள், பாலம் திறப்பு விழா என பலவற்றில் கலந்து கொள்கிறார். அது அவரது பணி. எனவே தவிர்க்க முடியாது. ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு வரும் அதிமுகவினர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதே இல்லை. பலரும் முகக் கவசம் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் மூக்குக்குக் கீழ்தான் போடுகின்றனர்.

பாதுபாப்பு
கூட்டமாக கூடி நிற்கிறார்கள். தனி மனித இடைவெளி கிடையாது. எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. இப்படி கூட்டம் கூட்டமாக கூடி நின்றால் மக்கள் கதி என்னாவது.. இவர்கள் பாட்டுக்குப் பரப்பி விட்டு போய் விடுவார்கள்.. மக்கள் கிடந்து சாக வேண்டுமா.. இதெல்லாம் முடிந்தவரை அதிமுகவினர் தவிர்த்தால் நல்லது. முதல்வரை வரவேற்க சிலர் மட்டும் வந்தால் போதாதா.. அல்லது முதல்வர்தான் கோபித்துக் கொள்வாரா.. நிச்சயம் கிடையாது. மக்களுக்காகத்தான் முதல்வர் வெளியே வருகிறார். ஆனால் அதிமுகவினர் திரளாக கூடுவதால் மக்களுக்குத்தான் பேராபத்து.. புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பாஜக
அதே போல இன்னொரு கொரோனாவைப் பற்றி கவலைப்படாத அக்கறை காட்டாத கட்சி என்றால் அது பாஜகதான். இந்தக் கட்சியினர்தான் தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் நடத்துகின்றனர். பெரும்பாலான கூட்டங்களில் சோசியல் டிஸ்டன்சிங் கிடையாது, பலர் முகக் கவசம் அணிவதில்லை. நெருக்கியடித்து நிற்கின்றனர், அமர்கின்றனர். சமீபத்தில்கூட சிவகங்கையில் ஒரு கூட்டம் கூட்டினர். ஆயிரக்கணக்கில் அதில் பலர் கலந்து கொண்டதாக அவர்களே புகைப்படம் போட்டுள்ளனர். அதைப் பார்க்கும்போது சிவகங்கை மக்களுக்கு இவர்களால் நோய் பெருமளவில் பரவி விடுமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது.

அலட்சியம்
பிரதமர் மோடியே மக்களை கவனமாக இருக்கச் சொல்கிறார். அலட்சியம் ஆபத்தைக் கொண்டு வந்து விடும் என்று சொல்கிறார். அவரும் தேவையில்லாமல் வெளியில் வருவதில்லை. மிக மிக கவனமாக இருக்கிறார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறார். அப்படிப்பட்ட பெரிய தலைவரே இப்படி கவனமாக இருக்கும்போது அவரது வழியில் நடப்பதாக சொல்லும் பாஜகவினர் இப்படி அத்தனை விதிகளையும் தூக்கிப் போட்டு மிதித்து நடந்து கொள்வது,, பிரதமர் மோடிக்கு பெருமை சேர்க்குமா அல்லது அழகு சேர்க்குமா.. இவர்களால் மோடிக்குத்தானே கெட்ட பெயர் வரும்.

தடை விதிப்பு
தமிழக அரசு உடனடியாக விரைந்து சில அதிரடிகளை கையில் எடுக்க வேண்டும். இப்படி ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூடுவதை தடை செய்ய வேண்டும். அரசியல் கட்சியினர் எந்த ரூபத்திலும் கட்சி சார்பான கூட்டங்களை நடத்த தடை விதிக்க வேண்டும். மீறி செய்வோர் மீது கடுமையான சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தால் அந்தக் கட்சிகளையே கூட தடை செய்யலாம்.. காரணம் இவர்களால் மக்களுக்கு பேராபத்து இருக்கிறது.

புத்திசாலித்தனம்
அதேசமயம், பாமக, தேமுதிக, மதிமுக என பல கட்சிகள் எந்த வகையிலும் இதுபோல கூட்டம் சேர்க்காமல் தேவையில்லாமல் மக்களை துன்புறுத்தாமல் அமைதியாக உள்ளன. அவைகளை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். மக்களுக்காக என்ற பெயரில் தேவையில்லாமல் வெளியில் கூட நோயை பரப்புவதைக் காட்டிலும் மக்களுக்காக வேறு வழிகளில் குரல் கொடுத்து வந்தாலே போதுமானது என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நேரம் இது.












Click it and Unblock the Notifications