தமிழக அரசியலில் புரட்சி வெடிக்க போகுது! உருவானது ஜெகுபாமக... அதிரடியாக அரசியலில் குதித்த குரு மகள்!
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏவும், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ. குருவின் மகள் விருதாம்பிகை "ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் விருதாம்பிகை கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே குருவின் மகன் கனலரசன் 'மாவீரன் மஞ்சள் படை' என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கும் நிலையில், தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் அதீத நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. அவரை தனது மூத்தமகன் என்றே ராமதாஸ் அழைப்பார். அந்தளவுக்கு குரு மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார் ராமதாஸ்.
இதேபோல் வன்னியர் குல இளைஞர்களால் மாவீரன் என்ற அடைமொழியோடு குரு அழைக்கப்பட்டார். இப்படி வன்னியர்சங்கத்திலும், பாமகவிலும் மிகப்பெரும் சக்தியாக இருந்த குரு கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

காடுவெட்டி குரு
அதன் பின்னர் குருவின் குடும்பத்தினருக்கும், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியது. குருவின் மருத்துவத்துக்கு ராமதாஸ் சரியாக உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை குரு தங்கை மீனாட்சி உள்ளிட்டோர் முன் வைத்தனர். மேலும், ராமதாஸுக்கு எதிராக குருவின் சகோதரிகளும், அம்மாவும் தொடர்ந்து கொந்தளித்தனர். இதனால் பாமகவுக்கும் குரு குடும்பத்திற்கும் இடையே சற்று இடைவெளி ஏற்பட்டது.
காடுவெட்டி குரு மகள்
அது நாளடைவில் விரிசலாகி இன்று காடுவெட்டி குடும்பத்தினர் புதிய கட்சியை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. காடுவெட்டி குருவின் மகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி அதிர்ச்சி அளித்தார். தற்போது அவரது அமைப்பு என்னவானது என தெரியவில்லை. இந்நிலையில், காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை "ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலம்பி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பாமக முளைத்திருக்கிறது. கடந்த வாரம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கட்சியின் தொடக்க விழா ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் எனக் கூறியிருந்தார்.
ஜெகுபாமக கொடி
அந்த வகையில் கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் கொடியை சேலம் மாவட்டம் ஓமலூர் அறிமுகம் செய்திருக்கிறார். ஏற்கனவே அறிவித்தது ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சியை என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். மஞ்சள் கொடியின் மையத்தில் காடுவெட்டி குருவின் படம் இடம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் வன்னியர் அமைப்புகள் பல இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் விருதாம்பிகை? அதனால் தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications