Pollachi News: பொள்ளாச்சி.. 200 பேர் வாழ்க்கையில் விளையாடியது 4 பேர்தானா.. தொடரும் புதிர்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் தீர்க்கப்படாத பல்வேறு கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றன. இந்த பிரச்சினையின் பின்னணியில் அரசியல் இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் அவசர பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து அறிவித்திருந்த போதிலும் மக்களுக்கு அந்த சந்தேகம் இன்னும் முழுமையாக தீரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சில கேள்விகளுக்கு விடை காண வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.
நாட்டையே பதற வைத்த பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி யார்?
அரசியல்வாதிகள் தொடர்பு
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு வெளியிட்டிருந்த வாட்ஸப் வீடியோவில், பலாத்கார விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பாக இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படாத நிலையில், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று காவல்துறை அவசரமாக அறிவித்து விட்டது ஏன்?
சிபிசிஐடி விசாரணை
பலாத்கார விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அளவிலான விசாரணை போதுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விசாரணை அளவு என்பது அதிகரிக்கப்பட வேண்டியது அல்லவா? குறைந்தபட்சம், சிபிசிஐடிக்கு கூட வழக்கு இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை.
பெண் எஸ்பி
இந்த விவகாரத்தில் பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தானாக முன்வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட எஸ்பி தெரிவித்திருந்தார். ஆனால் ஆண் அதிகாரிகளுக்கு பதிலாக பெண் எஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படவில்லையே ஏன் என்ற கேள்வி அடுத்ததாக எழுகிறது.
4 பேர்தானா
இதுபோல 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்க்கையில் விளையாடியது வெறும் நான்கே பேர்தான் என்றால் குழந்தை கூட நம்பாது. ஆனால் 4 பேருடன் விசாரணை வரம்பு முடிவடைந்துவிட்டதே ஏன் என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்விகளை முன் வைக்கிறார்கள்.