பொங்கல் பரிசு - ரேஷன் கடைகளின் முன் விளம்பர பேனர்கள் வைக்க ஹைகோர்ட் தடை - உடனே அகற்ற உத்தரவு
ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை: ரேஷன் கடை அருகில் விளம்பரம், பேனர் இருக்க கூடாது என்றும், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம் பெறலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்க பணம் உள்பட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்களில் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெற தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டோக்கன்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொடர்பாக ஆளுங்கட்சியினர், ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்துள்ளதாக கூறி, திமுக தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு சின்னம் பதித்து 39,000 ரேஷன் கடைகளின் முன் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்..
அனுமதியின்றி பேனர்கள் வைக்க மாட்டோம் என ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு உரிமை கோரி எதிர்கட்சியும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேனர்கள் வைக்கப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க கூடாது என்றும், ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்க கூடாது என உத்தரவிடக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரேஷன் கடை அருகில் விளம்பரம், பேனர் இருக்க கூடாது என்றும், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதேபோல, ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். அதேசமயம், பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம் பெற அனுமதித்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications