கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதலே தொடங்கும் பொங்கல் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு நாளை முதலே பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட சூழலில், அரசு கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ல் மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ல் காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதலே 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்:ள அனைத்து பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 19ஆம் தேதியே மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து பொதுமக்கள் பயணிக்க தொடங்கி இருப்பதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது. அதேபோல் சொந்த வாகனங்களில் பலரும் புறப்பட்டிருப்பதால், தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் இளைஞர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் அரசு கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த வெளியூரில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி இருக்கின்றனர். ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியான போதே, தனியார் கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக போகி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாகவே கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை பாரம்பரிய உடையணிந்து கொண்டாடிய மாணவர்கள், அப்படியே சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர். தற்போது அரசு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வந்ததால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications