Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு 'கண்டம்' வெயிட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2006-2011l வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் பொன்முடி அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டார். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

பொன்முடி மீது மொத்தம் 2 சொத்து குவிப்பு வழக்குகள் போடப்பட்டன. 1996-2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; 2006-2011-ல் அமைச்சராக இருந்த போது சொத்து குவித்ததாக மற்றொரு.

Ponmudi faces one moredisproportionate assets case before Justice Anand Venkatesh

இதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது 2006-2011 கால கட்டத்தில் அமைச்சராக இருந்த போது சொத்து குவித்த வழக்கு. இதில்தான் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலமே பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி பறிபோய்விட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்த மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு உள்ள பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விவரம்:

13.05.1996 முதல் 30.09.2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. 1996-2001 -ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக மனைவி, மகன்கள் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்தார் என 2002-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் ( Crime No.4 of 2002)

5 பேர் மீது வழக்கு: ஐபிசி 109, 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 13(1)(e), 13(2) பிரிவுகள் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி (A1), மனைவி விசாலாட்சி (A2), மாமியார் சரஸ்வதி (A3), பொன்முடியின் நண்பர்கள் ஏ. மணிவண்ணன் (A4), ஏ. நந்தகோபால் (A5) ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் விசாரித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 228 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 318 ஆவணங்கள் விழுப்புரம் சிறப்பு நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டன.

2004-ம் ஆண்டு விடுதலை- உச்சநீதிமன்றம் ரத்து: 21.07.2004-ம் ஆண்டு விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி அண்ணாமலை, பொன்முடி உள்ளிட்டோரை நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2006-ல் சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதே காலகட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனும் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த இருவர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டு இருவரையும் விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பொன்முடி மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி உத்தரவிட்டது.(State of Tamil Nadu v N. Suresh Rajan and others (2014 11 SCC 709).

குற்றச்சாட்டுகள் பதிவு: இதனையடுத்து 31.03.2015-ல் பொன்முடி உள்ளிட்டோருக்கான எதிரான வழக்கில் குற்றச்சாட்டுகளை விழுப்புரம் நீதிமன்றம் பதிவு செய்தது. அப்போது வழக்கில் சேர்க்கப்பட்ட மாமியார் சரஸ்வதி (A3), பொன்முடியின் நண்பர் நந்தகோபால் (A5) ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் பொன்முடி (A1), மனைவி விசாலாட்சி (A2), பொன்முடி நண்பர் மணிவண்ணன் (A3) ஆக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் 169 சாட்சிகளிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

விசாரணையில் திடீர் வேகம்: 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பொன்முடிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு இருப்பதால் மே மாத விடுமுறையில் சிறப்பு அமர்வாக விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததுடன் மறு உத்தரவு வரும் வரை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வேலூருக்கு மாற்றம்- விடுதலை தீர்ப்பு: இருப்பினும் இந்த வழக்கு 2022-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வேலூர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா இந்த வழக்கை விசாரித்தார். 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் வேலூர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி நீதிபதி வசந்தலீலா தமது 226 பக்க தீர்ப்பில் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி வசந்தலீலா, 2023-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றார்.

தாமாக முன்வந்து விசாரித்த ஹைகோர்ட்: பொன்முடி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்தார். அப்போது பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பது ஏன் என்பது தொடர்பாக 18 பக்க உத்தரவையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்திருந்தார். அதில், தாம் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்பதாலேயே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்து இருந்தார் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமது விடுதலைக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொன்முடியின் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் மாற்றம் செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணியை முடித்துவிட்டு இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிப்பார். நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க முடியாது. ஆகையால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் பொன்முடி மீதான 2002-ம் ஆண்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார். 2006-2011-ம் ஆண்டு காலத்துக்கான சொத்து குவிப்பு வழக்கிலேயே 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுவிட்டார் பொன்முடி. இனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து என்ன தீர்ப்பு வழங்குவார்? என்பது பெரும் எதிர்பார்ப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+