ஆஹா அப்படியா?.. கேட்கவே இனிக்குதே.. இனி 4 மாசத்திற்கு சென்னை மக்களுக்கு கவலையே இல்லை போங்க!
சென்னை: பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் சென்னை மக்களுக்கு இன்னும் 4 மாதத்திற்கு கவலை இல்லை.
சென்னையில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள்தான் சிங்கார சென்னை மக்களின் நீராதாரம். இந்த 4 ஏரிகளில் இருந்துதான் சென்னை மாநகராட்சி தண்ணீர் விநியோகம் செய்கிறது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே குடிநீர் வழங்குவது தொடர்பாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்
அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு 750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கனஅடி நீர்
இதன் மூலம் ஏரியில் 72 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் சோழவரம் ஏரியில் 112 கனஅடியும் புழல் ஏரியில் 2,162 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,585 கனஅடி என மொத்தம் 4,571 கனஅடி நீர் 4 ஏரிகளிலும் உள்ளன.
செம்பரம்பாக்கம்
அதே போல் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியிலிருந்து 117 கனஅடியும் செம்பரம்பாக்கத்தில் இருந்து 60 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் மூலம் சென்னை மக்களின் 4 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஏரிகளின் நீர் இருப்பு
வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதனால் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் உயர வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 713 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி வரை சென்னை மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு எங்கும் செல்ல தேவையில்லை என தெரிகிறது.