சேது கால்வாய் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் தெரியுமா? பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் சேது கால்வாய் திட்டத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டம் அல்லது சேது கால்வாய் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ராமர் பாலம் என கூறப்பட்டது. அப்படியான ஒரு ராமர் பாலம் இருப்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
இதனையடுத்து முடக்கப்பட்ட சேது கால்வாய் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஆளும் திமுக அரசை பல்வேறு பிரச்சனைகளில் ஆதரிக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையா எதிர்த்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் வணிக நோக்கிற்காக அப்பகுதியின் உயிர்ப்பன்மயத்தை அழிக்க நினைப்பது எப்படி சரியாகும் ? இப்பகுதியில் காணப்படும் பவளத்திட்டுகள் (corals), கடற்புற்கள் (Sea grass), சதுப்புநிலக் காடுகள் (Mangroves) ஆகிய மூன்றும்தான் கடல் சூழல் அமைவின் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்கற்றுபவை. இவை ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய சூழல் அமைவுகள் ஆகும். சதுப்புநிலக் காடுகளில் இருந்து நீரில் கலக்கும் மரத்தின் பாகங்கள் கடற்புற்களுக்கு ஊட்டச்சத்தாக மாறுகின்றன. கடற்புற்களும், பவளப்பாறைகளும் சேர்ந்து பல கடல வாழ் உயரினங்களுக்கு மேய்ச்சல் இடமாக (grazing grounds) இருக்கின்றன. இத்தகைய அறிய உயிர்ச்சூழல் அமைவுதான் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் அழியப்போகிறது.
மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகப் பகுதியில் உள்ள 21 தீவுகளை அலைகளின் அழுத்தத்தில் இருந்தும் கடல் அரிப்பில் இருந்தும் அரணாக காத்து நிற்பது தீவுகளைச் சுற்றி இருக்கும் பவளத்திட்டுகள்தான். தொடர்ந்து சட்ட விரோதமாக பவளதிட்டுகள் கடத்தப்படுவதாலும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளில் ஒன்றான கடல்மட்ட உயர்வாலும், கடல் நீரோட்ட மாறுபாட்டாலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளில் இரண்டு தீவுகள் (பூமரிச்சான், விலங்குசாலி) ஏற்கெனவே நீரில் மூழ்கிவிட்டன. சேது கால்வாய் திட்டத்திற்காக இப்பகுதி கடல் ஆழப்படுத்தப்பட்டால் பல லட்சம் ஆண்டுகளாக பூமியின் பரிணாமத்தில் உருவான இயற்கை அரணாக விளங்கும் பவளத்திட்டு அடுக்குகள் (coral reefs) பாதிப்புக்கு உள்ளாவதோடு, ஏற்படப் போகும் அலையின் அழுத்தத்தின் காரணமாக தீவுகள் மூழ்குவதோடு இப்பகுதியின் உயிர்ப்பன்மையமே முற்றிலும் அழிந்துப்போகும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர் அமைப்பின் நிர்வாகியான சுந்தரராஜன் சேதுக் கால்வாய் திட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம்: சிலர் நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும், "ஒரு கால்வாய் வெட்டினால் என்னவாகப் போகிறது, இங்கிலாந்தில் பாருங்க, டென்மார்க்கை பாருங்க, கடலுக்குள்ள ட்ரெயின் போகுது, அது இருக்கிறது, இது இருக்கிறது என்று "முனங்கி கொண்டிருக்கிறார்கள்"". அந்த "சிலருக்கு மட்டுமான பதில் இதுதான்"ட

இவ்வுலகில் பல்லுயிரியம் தழைத்து வாழவேண்டும் என்றால் "வெப்பம் கொஞ்சம் வேண்டும்", அதனால்தான் பல்லுரியம் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணலாம், அதாவது வெப்பமண்டல பகுதிகளில், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா போன்ற பகுதிகளில்தான் அதிகமான பல்லுயிர் காணப்படும், வடதுருவத்திலும் உயிர்கள் இருக்கும், ஆனால் வெப்பமண்டல பகுதியில் உள்ள அளவிற்கு கிடையாது. அதுதான் கடலிலும், கடலில் பவளப்பாறகளும், பவளதிட்டுகளும் வெப்பமண்டல கடல் பகுதியில்தான் அதிகமாக காணக்கிடைக்கும். ஆஸ்திரேலியா, இந்தியப்பெருங்கடல் இந்த பகுதிகளில்தான் பவளப்பாறைகள், திட்டுகள் காணலாம். வெப்பமண்டல பகுதியில் உள்ள இந்த பவளப்பாறைகளும் பவளத்திட்டுகளும்தான் எல்லா பெருங்கடலிலும் உள்ள பல்லுரியத்திற்கு அடிப்படை ஆதாரம், டென்மார்க்கிலும் மீன்பிடி தொழில் நடப்பதற்கு வெப்பமண்டல பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் முக்கியம். அதனால்தான் மேற்குலம் ஒரு விசயத்தை செய்துவிட்டது என்பதற்காக நம்முடைய பகுதிகளிலும் அதை செய்ய நினைப்பது அறிவிற்சிறந்த செயலாகாது. புரிந்துகொள்ளுங்கள்,it's interconnected world. இவ்வாறு சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications