சூப்பர் ஹீரோ.. சென்னை டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. 5 கிமீ நடந்தே போய் வழி உண்டாக்கிய நபர்.. செம
சென்னை: சென்னையில் டிராபிக்கில் சிக்கி இருந்த 4 ஆம்புலன்சுகளுக்கு வங்கி ஊழியர் ஒருவர் நடந்தபடியே வழி ஏற்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னையில் நேற்று முதல்நாள் மிக கனமழை பெய்தது. திடீரென தொடங்கிய மழை 12 மணி நேரம் விடாமல் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் 200 மிமீ மழை பெய்தது.
இந்த தீவிர கனமழையால் சென்னையில் பல இடங்களில் கடும் டிராபிக் ஏற்பட்டது. பல முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் 4-5 மணி நேரங்கள் வாகனங்கள் டிராபிக்கில் முடங்கின.
நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
ஆம்புலன்ஸ் சிக்கியது
இந்த டிராபிக்கில் சென்னையில் பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் சிக்கியது. பொதுவாக டிராபிக்கில் ஆம்புலன்ஸ்கள் சிக்கினால் அதற்கு உடனே வழி ஏற்படுத்திக்கொடுப்பது சென்னையில் வழக்கம். என்ன அவசரமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் நம்ம மக்கள் உடனே வழிவிட்டு விடுவார்கள். ஆனால் சென்னையில் நேற்று முதல்நாள் அப்படி வழி ஏற்படுத்த முடியவில்லை.
சென்னை டிராபிக்
காரணம் சாலை முழுக்க ஒரு இன்ச் நகர முடியாத அளவிற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கின. அதிலும் பல்வேறு சாலைகளில் 7- 9 கிமீ தூரத்திற்கு கூட வாகனங்கள் வரிசைகட்டி நின்று இருக்கின்றன. இதனால் சென்னையில் பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் டிராபிக்கில் சிக்கியது. அதிலும் சில இடங்களில் ஆம்புலன்ஸ்கள் 2-3 மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
சென்னை மழை
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் 4 ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்த ஜின்னா என்ற நபர் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார். சென்னையில் வங்கி ஒன்றில் ஜின்னா வேலை பார்க்கிறார். எப்போதும் அண்ணாசாலை வழியாக வீட்டிற்கு செல்வது வழக்கம். அன்றும் அவர் அண்ணாசாலை வழியாக பைக்கில் சென்று இருக்கிறார்.
ஜின்னா ஆம்புலன்ஸ்
சாலையில் டிராபிக் அதிகமாக இருந்ததால் எல்லோரையும் போல இவர் கடுப்பில் பைக்கை ஆப் செய்துவிட்டு போனை பார்த்தபடி இருந்துள்ளார். அப்போதுதான் அந்த ஆம்புலன்ஸ் சத்தம் 200 மீ தூரத்தில் பின் பக்கம் கேட்டுள்ளது. ஆனால் அந்த ஆம்புலன்ஸ் நகர முடியாமல் திணறி உள்ளது. ஒரு டிராபிக் போலீஸ் இருந்தாலும் ஆம்புலன்சுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து அனுப்பிவிடலாம்.
டிராபிக் ஆம்புலன்ஸ்
ஆனால் டிராபிக் போலீசார் வேறு வேறு இடங்களில் சிக்கியதால் இங்கே வர முடியவில்லை. எல்லோரும் ஆம்புலன்ஸ் போய் விடுமா என்று உச்சு கொட்டிக்கொண்டு இருந்த நேரத்தில்.. ஜின்னா போலீஸ் வரும்வரை காத்திருக்காமல் தானே களம் இறங்கினார். பைக்கை தூக்கி நடைபாதையில் வைத்து லாக் செய்துவிட்டு சாலைக்கு வந்தார் ஜின்னா.
ஜின்னாவின் சூப்பர் செயல்
எல்லோரும் நகருங்க.. ஆம்புலன்ஸ் போகட்டும் என்று ஒவ்வொரு வாகனத்தையும் சைட் வாக்கில் நெருக்கமாக நகர வைத்து ஆம்புலன்ஸ் போக வழி ஏற்படுத்தினார். அப்போது லேசாக மழை தொடங்கியது. ஆனால் ஜின்னா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. ஹெல்மெட்டை போட்டுகொண்டு.. ஒவ்வொரு வாகனமாக நகர வைத்து.. ஓடிக்கொண்டே ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார்.
ஆம்புலன்ஸ் செல்ல வழி
ஒரு கிமீ.. இரண்டு கிமீ அல்ல.. மொத்தம் 5 கிமீ தூரத்திற்கு ஜின்னா இப்படி நடந்தே ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். இதனால் அந்த ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அதே பாதையை பயன்படுத்தி மேலும் 3 ஆம்புலன்ஸ் பின்னாடியே வந்து டிராபிக்கில் இருந்து தப்பி இருக்கிறது. இது அத்தனையையும் ஜின்னா ஒற்றை ஆளாக சாதித்து இருக்கிறார்.
சூப்பர் ஹீரோ
பொதுவாக சூப்பர் ஹீரோக்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதிக்க மாட்டார்கள்.. ஸ்பைடி போல சிறப்பு காஸ்டியூமில் வர மாட்டார்கள்.. அவர்கள் சாதாரணமாக சாலையில் பைக் ஓட்டிக்கொண்டு இருக்கலாம்.. பக்கத்து வீட்டுக்காரர் லுக்கில் இருக்கலாம்.. வங்கி ஊழியராகவும் இருக்கலாம்.. அப்படி ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் நேற்று முதல்நாள் வங்கி ஊழியர் ஜின்னா பலரின் உயிரை காத்து சாதனை படைத்தது இருக்கிறார்.. அவர் வெறும் வங்கி ஊழியர் அல்ல.. அவர் ஒரு Friendly neighborhood Spider Man!