"ஆளுநர் தபால்காரர்".. ஸ்டாலின் மீது பாய்ந்து வந்த நயினார் நாகேந்திரன்.. பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்
சென்னை: மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு, "ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல" என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றி இருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நயினார் நாகேந்திரனுக்கு பதில் கொடுத்துள்ளார்.

ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "ஆளுநருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.ககாரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.
அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நியமன அரசு தான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. பதவியான ஆளுநர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், என்பதைத் தொடர்ந்து தி.மு.க தபால்காரருக்குரியதுதான் என்று சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஆளுநரை தபால்காரர் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டது பற்றிப் பேசினார்.
"மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல" எனத் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு "எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல" என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன் அவர்களே !" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications