அதிகரிக்கும் கொரோனா: குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு - ஆளுநர் மாளிகை அறிவிப்பு
ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு வேறு ஒரு நாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என்று ஆளுநர் மாளிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24ஆம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த 3 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாளை மறுநாள் 26ஆம் தேதி மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் ஆளுநர் கொடியேற்றி வைத்து உரையாற்றுவார். வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு கெரோனா கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும்.
ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் வேறொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறும். தமிழக மக்கள் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா வழிகாட்டுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications