விடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சென்னை: 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கான இடம் குறித்து சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்து பேசினார் என்று மூத்த வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம்.
கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம்_லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா_முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை. கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.
இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள்.

அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004ல் நிமிர வைக்கும் நெல்லை என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , "நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி" என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications