விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.. ஸ்டாலினை பார்த்ததும் பிரேமலதா வைத்த கோரிக்கை
சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதோடு அவரின் உடலுக்கு அரசு மரியாதையை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

பிரேமலதா கோரிக்கை: இந்த நிகழ்வில் கண்ணீர்விட்டபடி இருந்த பிரேமலதாவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இதையடுத்து தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக நாளைக்குள் பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் இரங்கல்: விஜயகாந்த் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில்,
▪️ அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
▪️ நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
▪️ தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.
( ஒற்றை காலில்.. எகிறி உதைக்கும்.. விஜயகாந்தை அப்படி மட்டும் பார்த்திருக்க கூடாது! இப்படியா நடக்கணும்!)
▪️ தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
▪️ தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.

▪️ அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
▪️ கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications