விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும்.. எங்களுக்கு வலியும் வேதனையும் தான்! பிரேமலதா உருக்கம்!
சென்னை: விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும், தாங்கள் மிகப் பெரிய வலியுடனும் வேதனையுடனும் இருப்பதாக பிரேமலதா உருக்கம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 60 நாட்கள் ஆகும் நிலையில், விண்ணுலகத்திலிருந்து உங்கள் அன்பான ஆசீர்வாதங்களை எங்கள் அனைவருக்கும் தர வேண்டும் என விஜயகாந்தை வேண்டி பிரேமலதா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும், விஜயகாந்தின் இழப்பை எதைக் கொண்டும் எங்களால் ஈடு செய்ய முடியாது என பிரேமலதா கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு;
''நீங்கள் எங்கள் எல்லோரையும் விட்டு விண்ணுலகம் சென்று இன்றோடு அறுபதாவது நாள். நீங்கள் இல்லாத ஒவ்வொரு நொடியும், நாங்கள் அனைவரும் மிகப் பெரிய வலியுடனும் வேதனையுடனும் இருக்கிறோம். உங்களை இழந்து வாடும் உங்கள் அன்பு மனைவி, மகன்கள், உற்றார்,உறவினர், கழகத்தினர், தமிழக மக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் அன்பான வணக்கங்கள், எங்கள் அனைவருக்கும் உங்கள் இழப்பு ஒரு மிகப்பெரிய இழப்பு.
இந்த இழப்பை எதைக் கொண்டும் எங்களால் ஈடு செய்ய முடியாது. எனவே நீங்கள் இந்த அறுபதாம் நாளில் விண்ணுலகத்திலிருந்து உங்கள் அன்பான ஆசீர்வாதங்களை எங்கள் அனைவருக்கும் தர வேண்டும்.''
விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக முதல் முறையாக பிரேமலதா தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது. இன்னும் யாருடன் கூட்டணி என்பதையே பிரேமலதா கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை. எல்லா கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மிகத் தீவிரமாக நடத்தி வரும் நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு வழக்கம் போல் கடைசி வரை இழுபறியாகவே காணப்படும் போல் தெரிகிறது.
இதனிடையே தேமுதிகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரேமலதா அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதனையும் யாரும் முறைப்படி செய்வது போல் தெரியவில்லை.
இந்தச் சூழலில் தான் தனது கணவரும் மறைந்த தேமுதிக தலைவருமான விஜயகாந்தை நினைத்து இப்படியொரு உருக்கமான பதிவை தனது சமூக வலை தளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் வரை தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications