விஜயகாந்த் மறைந்த பிறகு முதன் முதலாக ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் ‘ஷாக்’..பிரேமலதா சொன்ன காரணம்!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றிய நிலையில், பாதியிலேயே கயிறு அறுந்து கொடி கீழே விழுந்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் டிசம்பர் 29ஆம் தேதி மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு, ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவை தொடர்ந்து, தேமுதிக கட்சிக் கொடி கடந்த ஒரு மாதமாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் விஜயகாந்த் மரணமடைந்து 1 மாதம் ஆகியுள்ள நிலையில், இன்று முதல், தேமுதிக கொடிகள் முழுமையாக பறக்க விட பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.
தேமுதிக கொடி அறுந்து விழுந்தது: அதன்படி, இன்று தேமுதிக கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றினார். இந்நிலையில், கொடி ஏற்றிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே அறுந்து கொடி கீழே விழுந்தது.
பூக்கள் வைத்து கட்டப்பட்ட கொடியை, பிரேமலதா விஜயகாந்த் இன்று ஏற்றினார். கொடி மேலே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அறுந்து, கொடி சரிந்து தேமுதிக நிர்வாகி முகத்தின் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் கயிற்றில் கட்டி, கொடியேற்றினார் பிரேமலதா விஜயகாந்த். தொடர்ந்து, கட்சியினர், கட்சிக் கொடிக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்டனர். தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றியபோதே கொடி அறுந்து கீழே விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பிரேமலதா பேட்டி: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக தலைமை கழகத்தில் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கட்சியின் கொடி தற்போது முழு கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சி கொடியினை ஒரு மாதத்திற்குப் பிறகு முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதனை இன்று ஏற்றியுள்ளோம்.
கொடி ஏற்றும் போது கயிறு அறுந்து அரை கம்பத்தில் இருந்து விழுந்தது. ஒரு தடைக்கு பிறகு தான் ஒரு வெற்றி அமையும் என்று சொல்வார்கள். அதற்கு இந்த கொடி அறுந்து விழுந்தது ஒரு எடுத்துக்காட்டு. கழக கொடி அறுந்து விழுந்ததன் மூலம், இதுவரை எங்களுக்கு இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் தேமுதிக கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
விஜயகாந்த் நோக்கம்: மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாரோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும். இந்த இடம் ஒரு கோவிலாக பொதுமக்கள் தினமும் வழிபாடு செய்யும் தளமாக மாற்றப்பட உள்ளது.
வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் தினமும் நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து செய்ய உள்ளோம்.
யார் வேண்டுமானாலும் வரலாம்: விஜயகாந்த்துக்கு பொது இடத்தில் மணிமண்டம் கட்ட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கான ஆணை ஏதும் எங்களிடம் இன்னும் வரவில்லை. எங்களது சொந்த இடத்திலேயே கேப்டனை அடக்கம் செய்துள்ளதால் அவருடைய நினைவிடம் இது ஒரு ஜீவ சமாதியாக அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அவர்களுக்கு அன்னதானம், உதவிகள் என்றைக்கும் தொடரும். விஜயகாந்த் மறைந்து ஒரு மாதங்கள் தான் கடந்துள்ளது. எனவே, நான் அரசியல் பேச விரும்பவில்லை. கூடிய விரைவில் தலைமை கழகத்தில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும். அந்த சந்திப்பில் அரசியல் ரீதியான கேள்விகளுக்கு நிச்சயம் நான் பதில் அளிப்பேன்” எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications