பிரமிக்க வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்.. போல்ட் அன்ட் வெரி போல்ட்!
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் தலைவர்களில் பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஒரு தனி இடம் உண்டு. தமிழகத்தை உலுக்கிய ஒரு தலைவருக்கு மனைவியாக மட்டுமல்லாமல், அந்தத் தலைவரோடு சேர்ந்து உயர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு. இப்போது புதிய பொறுப்புக்கு வந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் திருமணத்திற்கு முன்பு, பின்பு என்று இரண்டாக பிரித்தால், திருமணத்திற்கு பிந்தைய விஜயகாந்த்தின் வாழ்க்கையை செதுக்கியதில் மிகப் பெரிய பங்கு பிரேமலதாவுக்கு மட்டுமே உண்டு.
அவரை ஒரு நடிகர் என்ற நிலையிலிருந்து அரசியல் தலைவராக மாற்றியது மட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் ரசிகர்களையும் படிப்படியாக அரசியல் தொண்டர்களாக மாற்றியதிலும் பிரேமலதாவின் பங்கு மிகப் பெரிய அளவில் உண்டு. புத்திசாலித்தனம், சாதுரியம், சாமர்த்தியம், கெட்டிக்காரத்தனம் என பிரேமலதா செயல்பட்ட விதம், செயல்படும் பாங்கு, விஜயகாந்த்துக்கு மட்டுமல்ல, தேமுதிகவுக்கும் கூட மிகப் பெரிய பலமாகும்.
சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் போகக் கூடாது.. பிரேமலதா விஜயகாந்த் சூசகம்!
அரசியல் அறியாதவர்
விஜயகாந்த்துக்காவது அரசியல் தலைவர்களுடன் நல்ல அறிமுகம் உண்டு. அரசியல் புரிந்தவரும் கூட. ஆனால், பிரேமலதாவுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. கேள்வி ஞானம் மட்டுமே. ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் தேமுதிகவை செதுக்கிய விதம்.. உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
விஜயகாந்த்தை பக்குவப்படுத்தியவர்
ஆங்க்ரி யங் மேனாக வலம் வந்த விஜயகாந்த்தை சரியான கோணத்தில், சரியான வேகத்தில் சரியான நோக்கத்தில் செதுக்கி வழி நடத்தியவரும் பிரேமலதாதான். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அதேபோல தனது தம்பி சுதீஷின் துணையோடு, விஜயகாந்த்தின் வெற்றி நடைக்கு தோள் கொடுத்தவர் பிரேமலதா.
தாய்மை உணர்வுடன்
நேற்று பேட்டியின்போது இதுவரை அன்னையாக, அண்ணியாக என்னைப் பார்த்து வந்த தொண்டர்கள் என்று கூறியிருந்தார் பிரேமலதா. உண்மையாகவே அந்த தாய்மையுணர்வுடன்தான் தனது கட்சியினரை விஜயகாந்த்துடன் இணைந்து வழி நடத்தி வருகிறார் பிரேமலதா.
விஜயகாந்த்தை உயர்த்தி தானும் உயர்ந்தவர்
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஆண் இருப்பார் என்பார்கள். ஆனால் அதை மாற்றிப் போட்டவர் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த்தை சரியான திசையில் வழி நடத்த பெரும் உதவியாக இருந்தவர். சிறந்த ஆலோசகராக, நல்ல துணைவியாக, நல்ல திட்டமிடுபவராக பல அவதாரம் எடுத்து விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் பேருதவியாக இருந்தவர், இருந்து வருபவர் பிரேமலதா.
மற்ற தலைவர்களுக்கு இல்லாத பெருமை
அரசியலில் புகுந்த குறுகிய காலத்திலேயே அதன் உச்சம் பார்த்தவர் விஜயகாந்த். அதற்குக் காரணம் பிரேமலதாவின் பங்கும் என்பதை மறுக்க முடியாது. வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்தப் பெருமை கிடைத்ததில்லை. சரத்குமார் போன்றோரும் அரசியலில் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த சாதனையையும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை கிடக்கு ஒரு பக்கம்
பிரேமலதாவைச் சுற்றிலும் எத்தனையோ சர்ச்சைகள் உலா வந்தாலும் கூட அதை பொருட்படுத்தாமல், அதை ஊதித் தள்ளி விட்டு நடை போட்டுக் கொண்டிருக்கிறார். குடும்ப அரசியல் என்ற கேள்விக்குக் கூட அவர் நேற்று அளித்த பதில் படு தில்லானது, தெளிவானதும் கூட. ஒவ்வொரு பிரச்சினையிலும் தெளிவான பதில் வைத்துள்ளார். நேரடியாக பேசுகிறார். நேரடியாக பேச முடியாத விஷயங்களுக்கு டிப்ளமேட்டிக்காக பதில் அளிப்பதிலும் கில்லாடியாக இருக்கிறார்.
விரைவில் விஜயகாந்த்தும் இணைந்தால்
தற்போது விஜயகாந்த் சுகவீனமாக உள்ள நிலையில் கட்சியை கலங்காமல், மேலும் சேதமடையாமல் காக்க வேண்டிய நிலையில் பிரேமலதா உள்ளார். தனது மகனை ஒரு பக்கம் அரசியலில் இறக்கி விட்டுள்ளார். புதிதாக பொருளாளர் பொறுப்பிலும் அமர்ந்துள்ளார். எதிர் வரும் தேர்தல்களை தேமுதிக எப்படி சந்திக்கப் போகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியை வலிமையாக்கி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் பிரேமலதாவும் விஜயகாந்த்தும் உள்ளனர். விஜயகாந்த்தும் மீண்டும் வலிமையோடு திரும்பி வரும்போது தேமுதிகவின் பழைய முகம் திரும்பக் கிடைக்கும்.