கரூர் துயரச் சம்பவ எதிரொலி.. பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு!
சென்னை: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் எதிரொலியாக உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கிருஷ்ணகிரியில் நடத்த இருந்த ரோடு ஷோ மற்றும் வேன் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, அரசியல் கட்சிகளின் சாலை பிரசாரம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ மற்றும் வேன் மூலமான தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரேமலதாவின் பிரசாரத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'இல்லம் தேடி... உள்ளம் நாடி...' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசார சுற்றுப்பயணத்தின்போது கிருஷ்ணகிரியில் பிரேமலதா விஜயகாந்த் ரோடு ஷோ நிகழ்ச்சி மற்றும் வேன் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அதேசமயம், பிரேமலதா விஜயகாந்த் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரேமலதாவின் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications